திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் இணையதளம் இன்று திடீரென முடக்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவின்ர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முரசொலி பத்திரிக்கை இரண்டாம் உலகப்போரின்போது திமுக தலைவர் கருணாநிதியால்தொடங்கப்பட்டது.
கருணாநிதியின் பன்முக எழுத்தாண்மைக்கு படியாகவும் வடிகாலாகவும் விளங்கி திமுகவின் கொள்கைகள், கருத்துகளைத் தாங்கி மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றது.
தொடக்கத்தில் துண்டறிக்கைகளாகவே வெளியிடப்பட்டு வந்த இந்த இதழ் 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி கருணாநிதியின் 18வது வயதில் வெளியானது.
1944 வரை பேப்பர் கிடைக்காததால் துண்டறிக்கையாகவே வெளிவந்து பின்னர் நிறுத்தப்பட்டது. மீண்டும் 1948ஆம் ஆண்டு சனவரி 14 அன்று முதல் வார இதழாக திருவாரூரில் இருந்து வெளிவரத்தொடங்கியது. 1954ஆம் ஆண்டு சென்னையிலிருந்து வார இதழாகவே வெளிவரத் தொடங்கிய முரசொலி, செப்டெம்பர் 17, 1960 அன்று முதல் நாளேடாக வெளிவரத் தொடங்கியது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி முரசொலி பத்திரிக்கையின் பவளவிழா நடைபெற்றது.
இந்நிலையில் முரசொலி இணையதளத்தின் முகப்பு பக்கம் சென்றால் அது ஹேக்கர் படத்துடன் இருப்பது போன்று ஹேக்கர்களால் முடக்கப்பட்டு உள்ளது. அதன்கீழே புத்தாண்டு வாழ்த்தினையும் ஹேக்கர்கள் பதிவு செய்துள்ளனர்.
இணையதள பாதுகாப்பு பற்றி இன்னும் கற்று கொள்ள வேண்டும் என்றும் ஹேக்கர்கள் அதில் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து தி.மு.க.வின் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.முரசொலி இணையதளம் முடக்கப்பதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.