பெண் செய்தியாளர் கன்னத்தை ஆளுநர் தட்டிக் கொடுத்த சர்ச்சை அடங்குவதற்குள், கோயில் விழாவில் மாணவிகளுக்கு சால்வை அணிவித்த போதும் ஆளுநர் இப்படித்தான் நடந்து கொண்டதாகவும் திருவையாறைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் ஆளுநர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டு சென்றபோது பெண் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். ஆனால், ஆளுநர் அதற்கு பதிலளிக்காமல் அவரது கன்னத்தை தட்டினார். ஆளுநரின் இந்த செயலுக்கு பெண் செய்தியாளர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ஆளுநரின் செய்கை குறித்து பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பெண் செய்தியாளர் கன்னத்தில் தட்டியது குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட செய்தியாளருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். பேத்திபோல் நினைத்து கன்னத்தில் தட்டியதாகவும், அதில் உள்நோக்கம் இல்லை என்றும் கூறியிருந்தார். தங்களின் மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்றும் ஆனால் அதற்கான விளக்கத்தை ஏற்க முடியாது என்றும் அந்த பெண் பத்திரிகையாளர் டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் கோயில் நிகழ்ச்சிக்காக ஆளுநர் பன்வாரிலால் திருவையாறு வந்தபோதும், இப்படித்தான் நடந்து கொண்டார் என்று அவர் மீது குற்றச்சாட்டு எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
தஞ்சாவூர் அருகே கோயில் நிகழ்ச்சிக்கு வந்த ஆளுநர் இப்படித்தான் நடந்து கொண்டார் என்று சமூக ஆர்வலர் பனசை அரங்கன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, கடந்த 13 ஆம் தேதி அன்று திருவையாறு அருகே கல்யாணபுரத்தில் உள்ள புகழ்பெற்ற சீனிவாச பெருமாள் கோயில் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையைத் தொடங்கி வைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வந்திருந்தார்.
மாணவி ஒருவருக்கு சால்வை அணிவித்த ஆளுநர், அவரது கன்னத்தை தட்டிக்கொடுத்து தொடக்கூடாது இடத்தில் கை வைத்தார். ஆளுநரின் இந்த செயல் அந்த நேரத்தில் சாதாரணமாகத்தான் தெரிந்தது. ஆனால், நிர்மலா தேவி விவகாரம் வெளிவந்த பிறகுதான், உள்நோக்கத்துடன் ஆளுநர் நடந்து கொண்டுள்ளார் என்பது தெரியவருவதாக அவர் கூறினார்.
பெண் செய்தியாளரின் கன்னத்தை தட்டி பாராட்டினேன் என்று கூறிய ஆளுநர் பன்பாரிலால் புரோகித், இந்த விஷயத்துக்கு என்ன சொல்லப்போகிறார் என்றும், இதுபோல் தொடர் சர்ச்சைகளில் சிக்கும் ஆளுநரை உடனே மத்திய அரசு பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் பனசை அரங்கன் குற்றம் சுமத்தியுள்ளார்.