தமிழக மக்கள்மீது மோடி வைத்த பாசம். நம் தண்ணீர் பிரச்சனையெல்லாம் தீரபோகுது. முதல்வருக்கு முருகன் கோரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Jun 7, 2021, 12:05 PM IST
Highlights

குழு அமைக்கிறோம், ஆராய்ச்சி செய்கிறோம் என்று எதிர்மறையாக சிந்திக்காமல், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முழு முயற்சி எடுத்திட வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

குழு அமைக்கிறோம், ஆராய்ச்சி செய்கிறோம் என்று எதிர்மறையாக சிந்திக்காமல், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முழு முயற்சி எடுத்திட வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 

கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், தமிழகத்தில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு,  இத்திட்டம் மூலம் நிரந்தர தீர்வு காண முடியும், சமீபத்தில் நடைபெற்ற நதிநீர் இணைப்பு திட்ட குழு கூட்டத்தின் முடிவில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்தும் விரிவான திட்ட அறிக்கையை தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய தொடர்புடைய மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. 

தெலுங்கானா மாநிலம்  இச்சம் பள்ளியிலிருந்து கல்லணை வரை 1,165 கிலோ மீட்டர் தூரத்திற்கு இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்படுகிறது, ஏறத்தாழ   68,000 கோடி ரூபாயிலான இத்திட்டத்தை செயல்படுத்தி நிறைவேற்றுகிற பொழுது, தமிழகத்திற்கு ஆண்டுக்கு 100 டிஎம்சி வரை தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தமிழக மக்களின் மீது கொண்டுள்ள பாசத்தால், இத்திட்டம் குறித்து ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். முன்னாள் முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைத்தார். மாண்புமிகு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்களும் இந்த ஆண்டே சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று தருவேன் என்று கூறியிருந்தார். 

அதன்படி இப்போது மத்திய அரசு தேசிய நீர் வளமை முகமை விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து தொடர்புடைய மாநிலங்களுக்கு அனுப்பி உள்ளது. தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி இது.இந்த வாய்ப்பை தமிழக அரசு பயன்படுத்தி தமிழகத்தின் நீர் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக எடுக்கவேண்டிய தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும், இதற்காக குழு அமைப்போம், ஆராய்ச்சி செய்வோம் என்று திட்டத்திற்கு எதிர்மறையாக சிந்திக்காமல் தமிழகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டு செயல்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். 

இதுபோன்ற திட்டங்களுக்கு வழக்கமாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியைவிட கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்திற்கு கூடுதலான நிதியை ஒதுக்க மத்திய அரசு முன்வந்தது மேலும் மகிழ்ச்சிக்குரியதாகும். ஏற்கனவே காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்து, தமிழக மக்களின் உரிமையை நிலைநாட்டி தந்ததே பாரத பிரதமர் திரு.மோடி அவர்கள் தான், அதேபோல் இப்போது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மட்டுமின்றி தமிழக மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கு, நீர் பாசனத்திற்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ள கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை ஏற்று செயல்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான், தமிழக மக்களின் சார்பில் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!