
அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தமிழகம் வருவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து தமிழக பிரச்சனைகள் குறித்து மனு அளித்து வந்தார். அவருடன் எம்.பி. மைத்ரேயன், முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
அப்போது எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததாக தெரிகிறது.
அதைதொடர்ந்து தமிழக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று இன்று பிரதமர் மோடியை சந்தித்து தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து மனு அளித்துள்ளார்.
மேலும் சட்டபேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு விழாவிற்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், சென்னையில் ஒ.பி.எஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு ஒ.பி.எஸ் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தமிழகம் வருவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழா நடக்கவிருக்கும் தேதியை அறிவியுங்கள் என மோடி கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமரிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஆலோசனை கூட்டத்தில் விரிவாக விவாதித்தோம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கபட்டிருந்தது.