அதிமுக கோட்டையில் வேட்டை... மநீம-விலிருந்து விலகிய முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய ஸ்டாலின்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 8, 2021, 7:11 PM IST
Highlights

அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தை வலுப்படுத்த மநீம முக்கிய நிர்வாகியான மகேந்திரன் திமுகவில் இணைவது கூடுதல் பலமாக அமையும் என்றும் கூறப்பட்டது. 

சட்டமன்றத் தேர்தலில் தோல்விக்குப் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் அக்கட்சியிலிருந்து அடுத்தடுத்து விலகினர். மநீம நிர்வாகிகள் பொன்ராஜ், சிகே குமரவேல், மௌரியா, சந்தோஷ்பாபு எனப் பலரும் கட்சியிலிருந்து விலகினர். கட்சியில் கமலுக்கு அடுத்து முக்கிய முகமாக அறியப்பட்ட அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரனும் விலகியது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.

கட்சியில் ஜனநாயகம் இல்லை என்றும், கமல் கட்சி நிர்வாகிகளின் குரலுக்கு மதிப்பளிப்பதில்லை என்றும் கடுமையாக விமர்சனங்களை முன் வைத்து மகேந்திரன் கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில் அவர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. கடந்த முறை பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்திருந்தாலும் கொங்கு மண்டலத்தில் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை.

எனவே அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தை வலுப்படுத்த மநீம முக்கிய நிர்வாகியான மகேந்திரன் திமுகவில் இணைவது கூடுதல் பலமாக அமையும் என்றும் கூறப்பட்டது. இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மகேந்திரன் திமுகவில் இணைந்தார். அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பத்மபிரியா, கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட ஜெகதீஷ் மற்றும் 20 மநீம மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 78 நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். 
 

click me!