கொத்துக்கொத்தாக வெளியேறும் எம்.எல்.ஏ.,க்கள்... உ.பி.யில் பாஜக இனி காலி... சரத் பவார் ஆரூடம்..!

By Thiraviaraj RMFirst Published Jan 13, 2022, 5:43 PM IST
Highlights

பாஜகவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது, அந்த கட்சி பெரும் தோல்வியை தழுவப்போகிறது

உத்தர பிரதேசத்தில் பாஜகவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது, அந்த கட்சி பெரும் தோல்வியை தழுவப்போகிறது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7ம்தேதி வரை நடக்கிறது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே இருக்கும் நிலையில் தேர்தல் தேதி அறிவித்தபின் நாள்தோறும் பாஜகவிலிருந்து எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் விலகியவாறு இருக்கிறார்கள். இதனால் கட்சித் தலைமை கலக்கமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதிவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

உ.பி. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து நாளொருமேனி பொழுதொரு வண்ணமாய் தினந்தோறும் எல்எல்ஏக்கள் கடந்த 3 நாட்களாக பாஜகவிலிருந்து வெளியேறி வருகிறார்கள்.

இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் மிக முக்கியத் தலைவரான சுவாமி பிரசாத் மவுரியா பாஜகவில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் 4 பேரும் அகிலேஷ் யாதவைச் சந்தித்தனர். அடுத்ததாக அமைச்சர் தாரா சிங் சவுகான் நேற்று பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பாஜகவில் இருந்து 7-வது எம்எல்ஏவும், பிற்படுத்தப்பட்ட சாதித் தலைவரும், சிகாஹோபாத் தொகுதி எம்எல்ஏ முகேஷ் வர்மா இன்று அக்கட்சியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் 8-வதாக பிதுனா தொகுதி பாஜக எம்எல்ஏ வினய் சாக்யாவும் அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளார்.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறுகையில், ‘’உத்தர பிரதேசத்தில் பாஜகவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த கட்சி பெரும் தோல்வியை தழுவப்போகிறது. அதற்கான அறிகுறிகள் தெளிவாக தெரியத் தொடங்கி விட்டன. பாஜகவில் இருந்து அமைச்சர், எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு வெளியேறாத ஒரு நாள் கூட இல்லை.

தினம் தினம் கூட்டமாக கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். உ.பி.யில் 13 எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.,வில் இருந்து விலகி, வேறு கட்சியில் சேர உள்ளனர். இன்று ஒருநாளில் மட்டும் 4 பாஜக எம்எல்ஏக்கள் வெளியேறுகிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது. இதில் இருந்தே உ.பி.யில் பாஜகவில் நிலை என்ன அறிய முடிகிறது’’ எனக் கூறினார்.

click me!