
கூவத்தூர் ரிசார்ட்டில் அடுத்து வைக்கப்பட்டுள்ள 95 எம்எல்ஏக்களில் 60க்கும் மேற்பட்டோர் விரக்தியின் உச்சத்தில் உள்ளனராம்.
விரக்திக்கு முக்கிய காரணமே அடைத்து வைத்தது கூட இல்லையாம். ஆட்சி நீடிக்குமா? எம்எல்ஏவாக தொடர முடியுமா? சொத்து குவிப்பு வழக்கு என்னவாகும்? முதலமைச்சர் பன்னீரா? சசிகலாவா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் அவர்களது மனதை குடைந்து தள்ளுகிறதாம்.
அற்ப ஆய்ஸில் தங்களது எம்எல்ஏ பதவி பறிபோய் விடுமோ? புதிய அமைச்சரவையில் தங்களுக்கு மந்திரி பதவி கிடைத்திடாதா என்ற ஏக்கம் பலருக்கு உள்ளதாக தெரிகிறது.
இதில் செம்ம காமெடி என்னவென்றால் தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் நாட்டின் எதிர்காலம் கருதி யோசித்து கொண்டிருக்கும் வேளையில் இந்த எம்எல்ஏக்களோ ராமன் ஆண்டாலென்ன? ராவணன் ஆண்டாலென்ன மூடில் இருக்கிறார்களாம்.
அவர்களுக்கு வேண்டியதெல்லாம் எம்எல்ஏ பதவியில் தொடர வேண்டும் அல்லது அமைச்சராக ஆக வேண்டும். அது சசிகலாவாக இருந்தாலும் பரவாயில்லை ஓபிஎஸ்சாக இருந்தாலும் பரவாயில்லை. என்ற மனநிலையில் அவர்கள் உள்ளதுதான் ஹைலைட்.
இதிலிருந்து ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.
எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் ஓடும் குதிரையில் சவாரி செய்ய வேண்டும் என்ற மனநிலையில் அவர்கள் உள்ளதையே இது காட்டுகிறது. இது தான் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களின் பிரச்சினையே தவிர வேறொன்றுமில்லை.
ஜெயா ப்ளஸ் தொலைகாட்சியில் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக அழைத்து பேட்டி கொடுக்க செய்திருக்கிறார்கள்.
அவர்களது நிலைமை பார்க்கவே பரிதாபமாக உள்ளது. எம்எல்ஏக்கள் கொண்டு சென்று அடைக்கப்பட்ட நாளிலிருந்து 5 நாளாகியும் அவர்கள் ஷேவிங் செய்து கொள்ளவே இல்லை என்பது அவர்களை பார்க்கும்போது தெரிந்தது.
சாதாரண லாட்ஜ்களிலேயே கூட முகச்சவரம் செய்து கொள்ள ஷேவிங் ரேசர்கள் கொடுக்கப்படுகிறது.
ரூ.4000 வசூலிக்கும் சொகுசு ரிசார்ட்டிலா இதெல்லாம் கொடுக்கமாட்டார்கள்? எப்போதும் முகச்சவரம் செய்து பளிச்சென்று காணப்படும் எம்ல்எல்ஏக்கள் கூட நான்கு நாள் வளர்ந்த தாடியோடு காட்சியளித்தனர்.
உளவியல் ரீதியாக பார்க்கும்போது நிச்சயம் இந்த எம்எல்ஏக்கள் எல்லாம் உற்சாகத்தோடு இல்லை என்பது தான் உண்மை.
அதனால் தான் சசிகலாவின் சந்திப்பு 3 மணி நேரம் நீடித்ததாம்.
முரண்டு பிடித்த 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை சமாதானம் செய்வதற்குள் சசிகலாவுக்கு நுரை தள்ளி விட்டதாம்.