கனகராஜ் எம்.எல்.ஏ அணி மாறமாட்டார் எங்களுடன் தான் இருப்பார் என பள்ளிகல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பெரியகுயிலி பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இந்த தீவிபத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தை நேற்று சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அதிகாரிகள் நடவடிக்கைகள் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார். விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் எடப்பாடி அணியை விட்டு விலகிவிடுவேன் எனவும், ஒ.பி.எஸ் அணிக்கு மாற தயாராக இருப்பதாகவும் கனகராஜ் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கொம்பணைப்புதூர் அம்மன் திருமண மண்டபத்தில் இன்று மதியம் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாய கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :
சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் கல்குவாரியில் நடந்துள்ள ஊழலை தான் விசாரிக்க கூறியுள்ளார். அதுகுறித்து விசாரணை நடத்தப்படும்.
அவர் அணி மாற மாட்டார். எங்களுடன் தான் இருப்பார். இது தவறான தகவல்.
இவ்வாறு கூறினார்.