
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதன் அடிப்படையில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போகும் பாஜகவிற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. 6வது முறையாக தொடர்ச்சியாக குஜராத்தில் வெற்றி பெறும் பாஜக, காங்கிரஸ் ஆட்சி செய்த இமாச்சலப் பிரதேசத்தையும் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. எனவே குஜராத்திலும் காங்கிரஸ் ஆட்சி செய்த இமாச்சலிலும் பாஜக வெற்றி பெற்றதற்கு எனது வாழ்த்துக்கள். பாஜகவின் இந்த வெற்றி, ஜனநாயகத்தைக் காக்க மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றுசேர வேண்டும் என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.
மேலும் தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்பட வேண்டும். ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சியான அதிமுகவும் தினகரன் அணியினரும் பணப்பட்டுவாடா செய்ததை ஆதாரங்களோடு தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவிடம் கூறியிருக்கிறோம். எனவே தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணப்பட்டுவாடா செய்த மதுசூதனனை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.