திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமானதையடுத்து அவரை சந்திக்க அவரது மகன் மு.க.அழகிரி மதுரையில் இருந்து கார் மூலம் சென்னை புறப்பட்ட வருகிறார். கலங்கிய கண்களுடன் தனது தந்தையைப் பார்க்க அவர் காரில் புறப்பட்டுச் சென்றதைப் பார்த்து அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி மருத்மதுவமனையில் கருணாநிதி சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவரது தொண்டை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த டிரக்யாஸ்டமி செயற்கை சுவாச குழாய் மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.
இந்நிலையில், அவரது உடல்நிலைக் குறித்து காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வயது மூப்பின் காரணமாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தில் நலிவு ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவரை பார்க்க யாரும் நேரில் வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மருத்துவமனையின் இந்த அறிக்கை தமிழகம் முழுவதும் பெருட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் கருணாநிதியை, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, வேலுமணி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ஜி.கே.வாசன், பாலகிருஷ்ணன், திருமாவளவன், சரத்குமார் உள்ளிட்டோர் வரிசையாக கோபாலபுரம் வந்து நலம் விசாரித்துச் சென்றது மேலும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
இந்தப் பரபரப்பு திமுக தொண்டர்களையும் தொற்றிக் கொண்டது. கோபாலபுரத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
இந்நிலையில் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சரமான மு.க.அழகிரி, தனது தந்தையைப் பார்க்க மதுரையில் இருந்து கார் மூலம் சென்னை புறப்பட்டார்.
அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும், அடிக்கடி சென்னை சென்று கருணாநிதியைச் சந்தித்து பேசி வந்தார். இந்நிலையில் தனது தந்தையின் உடல்நிலை குறித்து கேள்விப்பட்டவுடன் உடனடியாக மதுரையில் இருந்து காரில் சென்னை புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்.
கலங்கிய கண்களுடன் தனது தந்தையைப் பார்க்க அவர் காரில் புறப்பட்டுச் சென்றதைப் பார்த்து அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள் கண்ணீர்விட்டு அழுதனர். நாளை காலை அவர் கருணாநிதியைச் சந்திப்பார் என கூறப்பட்டுள்ளது.