டெல்லியில் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு வந்த ரகசிய தாக்கீது..!

By vinoth kumarFirst Published Apr 28, 2019, 10:05 AM IST
Highlights

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் தமிழகத்தில் இருக்கும் அதிமுக அரசுக்கு சிறிய கீறல் கூட விழாது என்று கோரி டெல்லியில் இருந்து மு.க.ஸ்டாலின் அங்கு ரகசிய தாக்கீது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் தமிழகத்தில் இருக்கும் அதிமுக அரசுக்கு சிறிய கீறல் கூட விழாது என்று கோரி டெல்லியில் இருந்து மு.க.ஸ்டாலின் அங்கு ரகசிய தாக்கீது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளோடு இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாகும் போது பெரும்பான்மையை இழந்து அதிமுக அரசு கவிழ்ந்து விடும் என்று ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வந்தார். மேலும் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமையும் என்றும் அவர் கூறி வந்தார். இதற்கு உகந்த சூழல் நிலவி வந்த நிலையில் இரண்டு மாதங்களில் தான் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்கிற கனவிலும் ஸ்டாலின் மிதந்து கொண்டிருந்தார். 

இந்த நிலையில் தான் அதிருப்தி எம்எல்ஏக்கள் மூன்று பேரை பதவி நீக்கம் செய்ய எடப்பாடி தரப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மூன்று எம்எல்ஏக்களின் பதவிகளை காலி செய்யும் போது தமிழக சட்டப்பேரவையில் மொத்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கை குறைந்து பெரும்பான்மைக்கு தேவைப்படும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் குறையும். இதன்மூலம் இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பின்னரும் பிரச்சனையில்லாமல் ஆட்சியை தொடரலாம் என்று எடப்பாடி தரப்பு கணக்குப் போட்டு வருகிறது. 

இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால்தான் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப் பட்டால் சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் என்று அவர் அறிவித்துள்ளார். ஆனால் பெரும்பான்மை பலமில்லாத நிலையில் திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் என்ன கொண்டு வராவிட்டால் என்ன என்று தினகரன் தரப்பே கிண்டல் செய்து வருகிறது. இப்படி அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் திமுக தரப்பு தவித்து வந்த நிலையில் டெல்லியில் இருந்து மிக முக்கிய அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் மூலமாக ஸ்டாலினுக்கு ஒரு முக்கிய தகவல் வந்துள்ளது. 

மத்தியில் மோடி ஆட்சியில் இருக்கும் வரை தமிழகத்தில் அதிமுக அரசு நீடிக்கும். மீண்டும் மத்தியில் மோடி ஆட்சி அமைத்தால் பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. எனவே அரசியல் சாணக்கியத்தனமாக பாஜக உடனான வெறுப்பை கைவிட்டுவிட்டு அவர்களுடன் சுமூகமாகும் பட்சத்தில் தமிழக தேர்தல் முடிவுகளில் திமுகவிற்கு சாதகமான அம்சங்கள் கிடைக்கும் பட்சத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் திமுக நினைப்பது நடக்கும் என்பது தான் அந்த தகவலில் சாரம்சம். 

பாஜகவுடன் நெருக்கம் காட்டவில்லை என்றாலும் கூட எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தாலே போதும் தமிழகத்தில் ஆட்சியை கலைத்து விட மேலிடம் உதவும் என்றும் அந்த அரசியல் பிரமுகர் ஸ்டாலினுக்கு வாக்குறுதி கொடுத்து உள்ளதாகக் கூறுகிறார்கள். இது குறித்து பேச ஸ்டாலின் தரப்பில் இருந்து மிக முக்கிய நபர் ஒருவர் விரைவில் டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!