
கடந்த 10 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்தைச் சீரழித்தும், சூறையாடியும் ஒரு ஆட்சி நடைபெற்றது. கடந்த காலத் தவறுகளிலிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14-வது மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது. மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசினார். “நான் எப்போதுமே அதிகம் பேச மாட்டேன். செயலில் திறமையைக் காட்டிட வேண்டும் என்று நினைப்பேன். ‘டூ ஆர் டை’ என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. செய் அல்லது செத்துமடி என்று அதற்கு பொருள். அந்த வார்த்தையைக்கூட கொஞ்சம் திருத்தம் செய்து சொல்ல வேண்டும் என்றால், இந்த டூவுக்கும், டைக்கும் இடையே உள்ள ஆர் என்ற வார்த்தையை நீக்கிவிட வேண்டும். ‘டூ அன்ட் டை’ என்றே சொல்ல வேண்டும். அதாவது, செய்து முடித்துவிட்டுதான் சாக வேண்டும். அந்த உணர்வோடு என்னுடைய கடமையை செய்துக்கொண்டிருக்கிறேன்.
அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை. அதனால்தான் திமுக ஆட்சி அமைந்த போதெல்லாம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டினோம். அதையெல்லாம் நானும் மறக்கவில்லை, நீங்களும் மறந்திருக்கமாட்டீர்கள். கடந்த மே மாதம்தான் நாம் ஆட்சிக்கு வந்தோம். ஆட்சிக்கு வந்து தற்போது 6 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் ஏராளமான திட்டங்கள் அரசு ஊழியர்களுக்காக செய்து தரப்பட்டுள்ளன. உங்கள் கோரிக்கைகளின் நியாயத்தை உணர்கிறேன். அரசாங்கம் இப்போது உள்ள நிலைமையை நீங்கள் உணர்ந்தாக வேண்டும். ரூ.5 லட்சம் கோடிக் கடனில் தமிழக அரசு இருக்கிறது.
கடந்த 10 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்தைச் சீரழித்தும், சூறையாடியும் ஒரு ஆட்சி நடைபெற்றது. கடந்த காலத் தவறுகளிலிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க வேண்டும். அந்தப் பணியை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். தமிழ்நாட்டின் நிதி நிலைமை விரைவில் சீராகும். அப்போது உங்களுடைய எல்லா கோரிக்கைகளையும் நீங்கள் கேட்காமலேயே நிறைவேற்றித் தருவோம். அரசு கஜானாவுக்கு வரவேண்டியதில் ஜி.எஸ்.டி. மிக முக்கியமானது. அதை மொத்தமாக ஒன்றிய அரசு பறித்துவிட்டது. அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டார்கள். நிதி நிலைமையைப் பொறுத்தவரை ஒன்றிய அரசிடம் கொத்தடிமை போல கையேந்தும் நிலையில்தான் மாநிலங்கள் இருக்கின்றன. ஜி.எஸ்.டி., முதல் வெள்ள நிவாரண நிதி வரை நமக்குத் தரவேண்டிய நிதி முழுமையாகத் தரப்படுவதில்லை. அப்படி தரப்படும் நிதியும் உரிய நேரத்தில் வழங்கப்படுவது இல்லை.” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.