
தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.
முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றதற்கு பின்பு தமிழக அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இது.
இன்று மாலை 4.30 மணிக்கு இந்த கூட்டம் நடக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைத்து அமைச்சர்களும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைகளுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்வது, இலவச திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் போன்றவை குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
அதேபோல உள்ளாட்சி தேர்தலை நடத்துவது, நீட் தேர்வு விவகாரம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.