"பெண்களுக்கான 33 % இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறும்" - மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உறுதி

First Published Feb 10, 2017, 7:12 PM IST
Highlights


மாநிலங்கள் அவையில் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்தவுடன், நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப்பேரவையிலும் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நாங்கள் நிறைவேற்றுவோம் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். 

மகளிர் நாடாளுமன்றம்

ஆந்திர மாநிலத் தலைநகர் அமராவதி நகரில், மாநில சட்டசபை சார்பில், தேசிய மகளிர் நாடாளுமன்ற மன்ற கூட்டம் நடந்து வருகிறது.

‘பெண்களுக்கு அதிகாரமளித்தல்- ஜனநாயகத்தை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் நேற்று கூட்டம் நடந்தது. 

பங்கேற்பு

இதில், அசோக் கஜபதி ராஜூ, புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண்பேடி, வங்காளதேச நாடாளுமன்ற சபாநாயகர் ஷிரின் சவுத்ரி, காந்தியவாதி எலா பாட், நடிகை மனிஷாகொய்ராலா உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

 
இந்த மாநாட்டில் முதல் சந்திரபாபு நாயுடு, மத்தியஅமைச்சர் வெங்கையா நாயுடு, புத்தமதத் தலைவர் தலாய்லாமா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். 

நிறைவேற்றுவோம்

இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசியதாவது-

நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரும் மசோதாவை மாநிலங்கள் அவையில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு பெரும் போது உறுதியாக நிறைவேற்றுவோம்.

இந்த மசோதா நிறைவேற்றும் நாளை பிரதமர் மோடி மனதில் வைத்து உள்ளார். நாடாளுமன்றத்தில் கருத்து ஒற்றுமை ஏற்படும்போது, இந்த மசோதா நிறைவேறும்.

உறுதி

பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் வெளிக்காட்டப்படாத கதாநாயகர்கள்.

அவர்களுக்காக ஆதரவு குரலும், இட ஒதுக்கீடும் கொடுக்க வேண்டிய நேரம் இதுதான்.

அவர்களுக்கு அனைத்து வகையிலான தார்மீக ஆதரவும் கொடுக்க வேண்டும்.

விரைவில், இந்த மசோதாவை நாங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் என கட்சி சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். 

சமத்துவமின்மை

இந்த மசோதா மட்டும் போதாது. அரசியல், நிர்வாகத்திறமை ரீதியாக இன்னும் தேவை.

இந்த விசயத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தைக் கூற வேண்டும்.

ஆண்-பெண் சரிநிகர் குறியீட்டில் இந்தியா 0.54 இடத்தில் இருக்கிறது. பாலின சமத்துவமின்மை, பொருளாதார வளர்ச்சியில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும்.

இது உலக அளவில் கவலை கொள்ளும் விசயமாகும்.

வரலாற்றில்

 உலக அளவில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரலாற்று ரீதியாக நாம்  பெண்களை பாகுபடுத்தியதில்லை.

செல்வத்துக்கு லட்சுமி, கல்விக்கு சரஸ்வதி, நதிக்கு கங்கை, இந்தியாவுக்கு பார மாதா என்று பெண்களின் பெயரைத்தான் வைத்து இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மோடிக்கு பாராட்டு

முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், “ பெண்களுக்கு அதிகாரிமளித்தல் என்றவிசயத்தில் பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். 

 இந்தியா ஒட்டுமொத்தமாக பிரதமர் மோடி தலைமையில் மாறும்'' என்றார். 

click me!