
பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கார் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். தேசிய தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி 2வது முறையாக தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். பாஜக மாநில தலைவர் எல். முருகன் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து மோடி இன்று தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில் பிரசாரம் நடைபெறும் இடத்துக்குச் செல்ல அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சபாநாயகர் தனபால் இருவரும் ஒன்றாக வந்துள்ளனர். இவர்கள் திருப்பூர் -தாராபுரம் சாலை காதபுள்ளபட்டி அருகே வந்த போது முன்னே சென்று கொண்டிருந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பயணித்த காரின் மீது பின்னால் வந்த சபாநாயகர் தனபால் பயணம் செய்த கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் உடன் சென்ற இரண்டு காவலர்கள் லேசான காயமடைந்தனர். இதனையடுத்து, வேறு காரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரதமர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு சென்ற நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.