தமிழகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள டிஜிட்டல் மின் அளவீட்டுக் கருவிகளை ஸ்மார்ட் கருவிகளாக மாற்ற வேண்டும் என்பதே முதலமைச்சரின் இலக்கு என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடிக்கடி மின் வெட்டு ஏற்பட அணிகல்கள் தான் காரணம் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய கருத்துக்கள் சோசியல் மீடியாவில் விவாதப் பொருளானது. அதிமுக ஆட்சி காலத்தில் பராமரிப்பு பணிகளைச் செய்யாததால் தான் சில இடங்களில் மரங்கள் வளர்ந்து அதன்மூலம் கம்பியில் அணில்கள் ஓடுகின்றன. இதனால் இரண்டு கம்பிகள் ஒன்றாகி மின்சாரம் தடைபடுகிறது எனக் கூறியதோடு மட்டுமல்லாது, அடுத்தடுத்து ஆதாரங்களையும் வெளியிட்டார்.
சொன்னதோடு மட்டுமல்லாது, முறையாக பராமரிப்பு பணிகளை முடித்து தமிழகத்தில் திடீர் மின் தடையை போக்கும் விதமாக தீயாய் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மின்வாரியத்தில் ஏற்பட்ட ரூ.900 கோடி இழப்பை ஈடுகட்ட ஸ்மார்ட் மீட்டர் முறை அமல்படுத்தப்படும்; மின் கணக்கீடு செய்யும் முறை டிஜிட்டல் மீட்டரில் இருந்து ஸ்மார்ட் மீட்டருக்கு மாற்றப்படும் என்றும், இதை தான் தமிழக முதல்வர் இலக்காக கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மின்வாரியத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்ய இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதனை செயல்படுத்துவதற்கான சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.