ஒரு மாவட்டம் கூட இப்படி இருக்க கூடாது... முதல் கூட்டத்திலேயே முதல்வர் கொடுத்த மிகப்பெரிய டார்க்கெட்..!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 02, 2021, 03:59 PM IST
ஒரு மாவட்டம் கூட இப்படி இருக்க கூடாது... முதல் கூட்டத்திலேயே முதல்வர் கொடுத்த மிகப்பெரிய டார்க்கெட்..!

சுருக்கம்

'தமிழ்நாடு இந்தியாவில் தன்னிகரற்ற மாநிலம் ஆக வேண்டும்; பின்தங்கிய மாவட்டம் என்று எதுவும் இருக்கக்கூடாது' மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் முதல் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் சற்றே குறைய ஆரம்பித்ததை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். துறை ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.

இதில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன். சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பி.இராஜா, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  விக்ரம் கபூர், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில், மு.க. ஸ்டாலின் உரையாற்றியதாவது: தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஒரே சீரான மேம்பாடு அடைந்த பகுதிகளாக மாறவேண்டும் என்றும், பின்தங்கிய சமூகம், பின்தங்கிய மக்கள் என்று யாரும் இருக்கக்கூடாது என்ற வகையில் ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள் ஆனாலும் கரையாத, நிலையான வளர்ச்சியை தமிழ்நாடு அடையவேண்டும் என்றும் அதற்கான திட்டமிடுதல்கள் ஒவ்வொரு துறையிலும் தேவை என்றும் குறிப்பிட்டார். 

மேலும், பொருளாதார வளர்ச்சியும், சமூக நலத் திட்டங்களும் ஒன்றுக்கொன்று கைகொடுத்து செயல்பட்டதால் தான், தமிழ்நாடு வளர்ச்சி அடைந்தது என நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென்  பாராட்டியதை முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.  

'தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது ஏற்றுமதி, இறக்குமதி மட்டும் அல்ல - நிதி மூலதனம் அல்ல - வளர்ச்சி என்பது அனைத்துத் தரப்பு மக்களின் வளர்ச்சியாக இருக்க வேண்டும். மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு, தமிழ்நாடு அரசு செல்ல வேண்டிய பாதைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழவேண்டும்’ என்றும், மாநிலத்தின் வளர்ச்சிக்கான நல்வழியினைக் காட்ட வேண்டுமென்றும் தெரிவித்தார். இதற்கு முன்னதாக மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், இந்தக் குழுவின் செயல்பாடுகள் குறித்தும், பல்வேறு திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்
விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!