பெருச்சாளியாலும் மின் வெட்டு ஏற்படும்... அணிலுக்கு அடுத்து விளக்கம் சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி..!

By Thiraviaraj RMFirst Published Jun 28, 2021, 10:51 AM IST
Highlights

'அணிலால் மின் தடை ஏற்படும் என்பதை, புள்ளி விபரங்களுடன் எங்கும் வந்து விவரிக்க தயாராக உள்ளேன். நீதிமன்றமும் இதை ஏற்றுள்ளது. அமெரிக்காவிலும், அணிலால் மின் தடை அதிகம் ஏற்பட்டுள்ளது,'' என, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
 

'அணிலால் மின் தடை ஏற்படும் என்பதை, புள்ளி விபரங்களுடன் எங்கும் வந்து விவரிக்க தயாராக உள்ளேன். நீதிமன்றமும் இதை ஏற்றுள்ளது. அமெரிக்காவிலும், அணிலால் மின் தடை அதிகம் ஏற்பட்டுள்ளது,'' என, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

தமிழகத்தில், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தொடர்ச்சியாக மின் தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 'மின் கம்பிகளுக்கு இடையில் அணில்கள் விளையாடுவதால், மின் மாற்றியில் பழுது ஏற்பட்டு, மின் தடை ஏற்படுகிறது' என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். அவரின் இந்த விளக்கத்தை, சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘’தமிழகத்தில், ஒன்பது மாதங்களாக, மின் வாரியத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால், மின் மாற்றிகள் உள்ளிட்ட கருவிகளில் பழுது ஏற்பட்டு, மின் தடை ஏற்படுகிறது. இது, தற்காலிகம் தான். இது சரியானதும், தடையில்லா மின்சாரத்தை தி.மு.க., அரசு கொடுக்கும். அணில் போன்ற உயிரினங்கள், ஆபத்து அறியாமல் மின் கம்பிகளில் தாவி விளையாடும் போது, 'சார்ட் சர்க்யூட்' ஏற்பட்டு, மின் மாற்றிகள், 'ட்ரிப்' ஆகின்றன. அப்போது, மின் கடத்தல் நிறுத்தப்பட்டு விடும்.

இல்லையெனில், பெரிய ஆபத்து ஏற்படும். எனவே, கம்பிகள் உரசுவது போல, உயிரினங்கள் விளையாடும் போதும், கட்டாயம் மின் தடை ஏற்படும். அமெரிக்காவில் அதிக மின் தடை ஏற்படுகிறது. பெரும்பாலான மின் தடை, அணில்களால் தான் உருவாகிறது. இதை அமெரிக்க பத்திரிகைகளே தெரிவித்துள்ளன. அணில்களால் மின் தடை ஏற்படுவது, பல நாடுகளில் நடக்கிறது. மின் தடை குறித்து, வாரிய உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அவர்கள் புள்ளி விபரங்களுடன் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் தான், மின் தடைக்கு அணிலும் காரணம் என்று கூறினேன்.

அ.தி.மு.க., ஆட்சியில், தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த சரவணன் என்பவர், மின் விபத்தில் சிக்கி உயிர் இழந்தார். அவரது தந்தை இழப்பீடு கேட்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த போது தான், அணில்களால் மின் மாற்றியில் பழுது ஏற்பட்டு, அதனால் உருவான விபத்தில் சிக்கி, சரவணன் உயிர் இழந்ததாக, தமிழக மின் வாரியம் தரப்பில், நீதிமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அணில்களால் விபத்து நடக்குமா என்பதை அறிவதற்காக, உயர் நீதிமன்ற நீதிபதியே, சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்துள்ளார்.

அணில்களால் மின் தடை ஏற்படும். மின் கம்பிகள் உரசும் போது, விபத்தும் ஏற்படும் என்பதை உணர்ந்து, அதை ஏற்று தீர்ப்பளித்துள்ளார். சமீபத்தில், விருத்தாசலம் பாலக்கரை பகுதியில், மின் மாற்றியில் பழுது ஏற்பட்டு, அப்பகுதியில் அரைமணி நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டிருக்கிறது. அதிகாரிகள் ஆய்வு செய்த போது, மூன்று அணில்கள், அங்கு இறந்து கிடந்தன. நாகப்பட்டினம் மாவட்டம், சாமந்தன்பேட்டையிலும் அணிலால் மின் கம்பிகள் உரசி, மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில், மின் தடை ஏற்பட்டுள்ளது. இப்படி பல இடங்களில் நடந்துள்ளது.

அணிலால் மின் தடை ஏற்படுகிறது' என, நான் சொன்னதும், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், என்னை கிண்டல் செய்து, அற்புதமான கேள்வியை, 'டுவிட்டரில்' பதிவிட்டார். 'சென்னையில், மின் கம்பிகள் பூமிக்கடியில் செல்லும் போது, இங்கே எப்படி மின் தடை ஏற்படுகிறது' என, கேட்டார். அறிவுப்பூர்வமான கேள்வி தான். ஆனால், பூமிக்கடியில் மின் கம்பிகள் போனாலும், அதை, பெருச்சாளிகள் கடிக்கும். அதனால், 'சார்ட் சர்க்யூட்' ஏற்பட்டு, மின் மாற்றிகள் பழுதாகி, மின் தடை ஏற்படும். இதை நான் சொன்னதும், உடனே தன், 'டுவீட்'டை நீக்கி விட்டார். அணிலால் மின் தடை ஏற்படும் என்பதை, புள்ளி விபரங்களுடனும், எங்கு வந்து வேண்டுமானாலும் நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன்.

அணிலால் பிரச்னை ஏற்படும் என்பதற்கு, முன்னாள் அமைச்சர் தங்கமணி, எந்த விளக்கமும் சொல்லாமல் அமைதியாக இருந்து விட்டார். அதில், உண்மை இருக்கிறது என்பது அவருக்கும் தெரியும். மின் தடை இல்லா மாநிலமாக, தமிழகம் இருக்க வேண்டும் என்பதில், அமைச்சர் முதல் வாரியத்தின் கடைக்கோடி ஊழியர் வரை, உயிரை கொடுத்து, கொரோனா அச்சத்திலும் பணியாற்றுகிறோம். எங்கள் உழைப்பை கொச்சைப்படுத்த வேண்டாம்’’ என அவர் தெரிவித்தார்.

click me!