
தமிழக அரசை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எதையாவது கூறிக் கொண்டிருக்கிறார் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது.
கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
விபரீதங்களை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகமாக தண்ணீர் தேங்கிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் மக்களை மீட்க மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.
பருவமழையை எதிர்கொள்ள முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை என ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் காமராஜ், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குறை சொல்வதற்காக எதையாவது கூறிக் கொண்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
திருவாரூரில் மழை பாதித்த இடங்களை உணவுத் துறை அமைச்சர் காமராஜ் இன்று ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், திருவாரூரில் தண்ணீர் வடிவதற்கான நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். திருவாரூரில் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 3 மாதங்களுக்குத் தேவையான உணவு பொருட்கள் அங்காடியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அரசை குறை சொல்ல எதையாவது கூறிக் கொண்டிருப்பதாகவும், அமைச்சர் காமராஜ் கூறினார்.