
மழை வெள்ளம் பாதிப்பு குறித்து அரசு மீது குறை கூறுவதை விடுத்து மக்களைக் காக்க ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை எதிர்க்கட்சிகள் வழங்க வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விபரீதங்களை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகமாக தண்ணீர் தேங்கிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் மக்களை மீட்க மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.
பருவமழையை எதிர்கொள்ள முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை என ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, பருவமழையை எதிர்கொள்வதற்கும் வெள்ள பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கவும் அரசு முழுவீச்சில் நடவடிக்கைகள் எடுத்துவருவதாக தெரிவித்தார். மழை வெள்ள பாதிப்பு குறித்து அரசின் மீது குறைமட்டும் சொல்லாமல், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் எதிர்க்கட்சிகள் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.