
சட்டசபைக்குள் குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் சென்றதாக ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது சட்டசபை உரிமை குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து தி.மு.க. உயர்நீதிமன்றம் சென்றது.
இதேபோல் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் சபாநாயகருக்கு உள்ள அதிகாரங்கள் உட்பட பலவற்றின் மேல் கேள்வி எழுப்பி பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் உயர்நீதிமன்றம் சென்றுள்ளனர்.
இந்த வழக்குகளையெல்லாம் இணைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆக ஆளும் எடப்பாடி டீமையும், சபாநாயகரையும் தங்களின் பொது எதிரியாக பாவித்து ஸ்டாலின் மற்றும் தினகரன் அணியினர் நீதிமன்றத்தில் ஒன்று சேர்ந்து நிற்கின்றனர்.
ஏற்கனவே இந்த ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலினுக்கு அண்டர்கிரவுண்டில் சப்போர்ட் செய்கிறார் தினகரன் எனும் விமர்சனம் ஒன்று ஹாட்டாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் இந்த ஒற்றுமை நிலை அந்த விமர்சனத்துக்கு வலு கூட்டியிருக்கிறது.
அதே நேரத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை கமிஷன் விசாரணை நடத்தும். அப்போது அவரிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டு தி.மு.க. பிரமுகரான சரவணன், ஆறுமுகசாமி கமிஷனில் மனு தாக்கல் செய்துள்ளார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடந்தபோது ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தார். ஆனால் கட்சியின் பொது செயலாளர் எனும் முறையில் தேர்தல் ஆவணங்களில் அவரது கையெத்து இருந்தது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சையிலிருந்த ஜெ.,யால் எப்படி கையெழுத்திட்டிருக்க முடியும்? அப்படியானால் இதில் நடந்திருக்கும் முறைகேடுகளென்ன? என்பதையெல்லாம் வெளிக்கொண்டு வரும் நோக்கிலேயே இந்த குறுக்குவிசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
ஆக முதல் வழக்கில் எடப்பாடி டீம் மற்றும் சபாநாயகருக்கு எதிராக தினகரன் அணியுடன் கைகோர்த்து நிற்கும் தி.மு.க., மற்றொரு வழக்கில் சசி மற்றும் எடப்பாடி, பன்னீர் ஆகிய அனைத்து அ.தி.மு.க.வினரையும் தன் முழு எதிரியாக பாவித்து நிற்கிறது.
தி.மு.க.வின் இந்த டபுள் ரோல் அரசியல் அரங்கத்தை அதிர வைத்திருக்கிறது. அதாவது அங்கிட்டு நண்பன், இங்கிட்டு எதிரி என்று கண்ணாமூச்சி ஆடுகிறார்கள் என்று விமர்சிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.