ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் போலீசாரின் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போராட்டங்ககாரார்கள் தங்களை பார்க்க வந்த அமைச்சர் கடம்பூர் ராஜுவை சரமாரியாக கேள்வி கேட்டு விரட்டி அடித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டுமென வலியுறுத்தி தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது கடந்த மே 22-ஆம் தேதி காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு, தடியடி தாக்குதல் நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என 99 நாட்களாக போராடிய மக்களை தமிழக அரசோ, அமைச்சர்களோ கண்டுகொள்ளவில்லை. 100 ஆவது நாள் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம்சென்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடுநடத்தி 13 பேர் படுகொலை செய்யப் பட்டனர்.
துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பங்கள் சோகத்தில் உள்ளன. காயமடைந்தவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
தமிழக அரசு உத்தரவிட்டுத்தான் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது என உயிர்களைப் பறிகொடுத்த குடும்பத்தினரும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களும் கூறுகின்றனர்.
இந்தநிலையில், தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக வந்தார்.
இருவரைச் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்கள்யாரும் அவரிடம் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. மற்றவர்களோ“இவர் ஏன் வந்தார், எதற்கு வந்தார்” என அவர் காதில் விழும்படி பேசினர்.
அப்போது காயமடைநத ஒருவர், அமைச்சரைப்பார்த்து எங்களை சுடுறதுக்கு ஸ்டெர்லைட்காரன்கிட்ட எவ்வளவு பணம் வாங்கினீங்க? என நேரடியாக கேள்வி எழுப்பினார். தொடர்ந்த அந்த வார்டில் இருந்த மற்றவர்களும் அமைச்சரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
நிலைமை விபரீதமாவதை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அமைச்சரை அங்கிருந்து உடனடியாக அழைத்துச் சென்றார். ஆனாலும் அமைச்சரே எங்க ஓடுறீங்க ? எங்க கேள்விக்கு பதில் சொல்லிட்டு போங்க என தொடர்ந்து கூச்சலிட்டனர். அங்கிருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று அமைச்சர் வெளியேறிவிட்டார். 50 பேரை பார்த்து நலம் விசாரிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்த அவர் 2 பேரை மட்டும் பார்த்துவிட்டு கிளம்பினார்.