முதல்வரிடம் இருந்து வந்த நேரடி உத்தரவு... 3 முக்கிய மாவட்டங்கள் குறித்து ஆய்வை ஆரம்பித்த அமைச்சர்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 15, 2021, 11:16 AM IST
Highlights

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணிகள் தொடர்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துறை ரீதியான ஆய்வுக்கூட்டங்களை நடத்தி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு கூட தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சாலை பாதுகாப்பு, மேம்பாலம், பாலங்கள் கட்டுமானம், பழைய பாலங்களை சீரமைத்தல் உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பல்வேறு விவகாரங்களை அலசிய முதல்வர், முடிக்கப்படாமல் உள்ள திட்டங்களை விரைந்து முடிக்க அறிவுறுத்தியிருந்தார். 

அதன் தொடர்ச்சியாக நேற்று காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணிகள் தொடர்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஊரக தொழிற்துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் உள்ள முடிவுற்ற பணிகள் முன்னேற்றத்தில் உள்ள பணிகள், மீதமுள்ள பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் ஒப்பந்த செயலாக்கம் மற்றும் பரிசீலனையில் உள்ள பணிகள், ஒப்பந்தப்புள்ளி அழைக்கப்படவுள்ள பணிகள், நில எடுப்பு பணிகள், மதிப்பீடு நிலையில் உள்ள பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார், குறிப்பாக கூட்ட நெரிசல் உள்ள நகர பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். அதன்படி மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.  NH45 என்று சொல்லக்கூடிய திண்டிவனத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான நெடுஞ்சாலையில் சிறப்பு விருந்தினர்கள், மாநிலத்தில் இருக்கின்ற அதிகாரிகள் பயணிக்கிறார்கள், அவ்வாறு பயணிக்கக்கூடிய இடத்தில் சுற்றுலா மாளிகை தேவை என்ற கருத்து உள்ளது, அதனை முதலமைச்சர்  கவனத்திற்கு கொண்டு சென்று அப்பகுதியில் சுற்றுலா மாளிகை அமைப்பதற்கு வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 


மேலும், ஊராட்சி ஒன்றிய சாலைகள், ஊராட்சி சாலைகள் என இரண்டு வகை இருக்கிறது. இந்த இரண்டு வகையும் மாநில நெடுஞ்சாலை துறைக்கு சம்பந்தம் இல்லை. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஒன்றியத்திற்கு சம்பந்தப்பட்ட சாலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக கணக்கில் எடுத்த சுமார் 10,000 கிலோ மீட்டர் சாலைகளை ஐந்தாண்டுகளுக்குள் பகுதி, பகுதியாக அந்த சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அச்சாலைகளை நபார்டு திட்டத்தின் கீழ் கிராம சாலைகள் அமைக்க செய்ய வேண்டிய முயற்சிகளை நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்கள். 

 மாநில தலைநகர்களுக்கு ஓட்டியுள்ள காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள சாலைகள் வழியாகத்தான் தலைநகர் சென்னை செல்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால் மூன்று மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் செய்யவேண்டும் என்ற காரணத்திற்காகத் தான் இந்த ஆய்வுக கூட்டத்தை நடத்தி உள்ளோம். எனவே இந்த குறைகள் எல்லாம் கட்டாயம் கூடிய விரைவில் விரைந்து செயல்பட்டு நிறைவேற்றப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். 

click me!