கர்நாடக அரசின் செயலால் கடும் அதிர்ச்சி... தமிழக விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்த அமைச்சர் துரைமுருகன்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 3, 2021, 12:25 PM IST
Highlights

மார்கண்டேய நதியில் கர்நாட அணை கட்டும் விவகாரத்தில் நடுவர் மன்றம் மூலமாக தீர்வு காணப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
 

கர்நாடகாவின்  எல்லையான‌ முத்தியால்மடுகுவில் உற்பத்தியாகும் மார்க்கண்டேய நதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுழைகிறது. இந்த ஆற்றின்நீரால் வேப்பனப்பள்ளி, பாலனப்பள்ளி, திப்பனப்பள்ளி பகுதிகளை சுற்றியுள்ள நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன. இதற்கு எதிராக 2013ம் ஆண்டு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், மார்க்கண்டேய நதியில் அணை கட்ட கர்நாடகாவுக்கு தடையில்லை எனக்கூறி 2019ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. 

கர்நாடக அரசு பங்காரு பேட்டையை சுற்றியுள்ள 45 கிராமங்களின் குடிநீர் தேவைக்காக 40 மீட்டர் உயரம், 414 மீட்டர்நீளத்தில் அணையை கட்டி முடித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. தவிர தென்பெண்ணை ஆற்றினால் பயனடையும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணா மலை, விழுப்புரம், கடலூர் ஆகிய5 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். 

மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டியுள்ள விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 02.07.2021 அன்று சில நாளேடுகளில் மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணைக் கட்டியுள்ளது பற்றி செய்திகள் வெளியாகியுள்ளன. மார்கண்டேய நதி கர்நாடகத்தில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் பெண்ணையாற்றில் கலக்கும் ஒரு சிறு கிளை நதியாகும்.

2017-இல் மத்திய நீர்வள குழுமத்தின் பொறியாளர்கள் ஆய்வு செய்தபோது அரசு அப்பகுதியில் குடிநீர் தேவைக்காகவும் நிலநீரை செரிவூட்டுவதற்காகவும் சுமார் 0.5 டி.எம்.சி கொள்ளலவுள்ள ஒரு அணையை கட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2019-இல் இந்த அணை அநேகமாக கட்டிமுடிந்துவிட்டதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 

கர்நாடகாவின் இச்செயலை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் 18.5.2018-இல் ஒரு அசல் வழக்கும், ஒரு இடைக்கால மனுவும் தாக்கல் செய்ததன் பேரில் உச்சநீதிமன்றம் 14.11.2019 அன்று அளித்த தீர்ப்பில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று ஆணையிட்டது. இந்த நடுவர் மன்றத்தை அமைக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வந்துள்ளது.

கர்நாடக 29.6.2021 அன்று தமிழ்நாடு அரசு மத்திய ஜல் சக்தி அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்திலும் நடுவர் மன்றத்தை விரைவில் அமைக்க வலியுறுத்தியுள்ளது. இந்த அணையினால் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி தாலுக்காவில் மார்கண்டேய நதியின் குறுக்கே நான்கு சிறு அணைகளினால் புஞ்சை பாசன வசதி பெறும் சுமார் 870 ஹெக்டேர் பாதிக்கப்படும். தமிழ்நாடு அரசு விரைவில் நடுவர் மன்றத்தை அமைக்க தொடர்ந்து நடுவன் அரசை வலியுறுத்தும். நடுவர் மன்றத்தின் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். மார்கண்டேய நதியினை சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நலனை பாதுகாக்கவும் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனநீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 

click me!