உத்தரகாண்ட் முதல்வராக இருந்து வந்த தீரத் சிங் ராவத் அரசியலமைப்பு நெருக்கடி காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி அவர் அம்மாநில ஆளுநரிடம் வழங்கினார்,
உத்தரகாண்ட் முதல்வராக இருந்து வந்த தீரத் சிங் ராவத் அரசியலமைப்பு நெருக்கடி காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி அவர் அம்மாநில ஆளுநரிடம் வழங்கினார், அவர் முதல்வர் பதவி விலகி இருப்பது அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் 70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக 57 எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. இதில் கங்கோத்திரி சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது.
அதாவது உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தின் செயல்பாடுகள் மீது பாஜக தலைவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல திரிவேந்திர சிங் ராவத்தின் தலைமையில் பாஜக சிறப்பாக செயல்பட முடியாது என கருதப்பட்டதால், அவரைப் பதவியில் இருந்து விலக பாஜக தலைமை கேட்டுக் கொண்டதை அடுத்து அவர் பதிவி விலகினார். அதற்கு அடுத்த முதல்வராக பதிவியை கைப்பற்ற கடுமையான போட்டி இருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 56 வயதான தீரத் சிங் ராவத், அம்மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பாஜக எம்பி ஆக இருந்தவர் ஆவார்.
தற்போது அவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ளது, ஆனால் ஆறு மாத காலத்திற்குள் அவர் ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றால் மட்டுமே அவர் முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்ள முடியும், அதே வேளையில் அடுத்த ஆண்டு அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கிடையில் அம்மாநிலத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக இடைத்தேர்தல்களுக்கு தேர்தல் ஆணையத்தால் தடை விதித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இடைத் தேர்தல் தொடர்பான நிலைமை தெளிவாக இல்லை என்பதால், அவர் பாஜக தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்த பின்னர் முதல்வர் பதவியை விட்டு விலகியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அம்மாநில பாஜக தலைவர், தீரத் சிங் ராவத் பதவி விலகியுள்ள நிலையில் இன்று மாலை சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அடுத்த முதல்வர் தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்தே தேர்வு செய்யப்பட இருக்கிறார். எனவே சட்டமன்ற கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக கட்சியின் பொறுப்பாளர்கள், பார்வையாளர்கள் டேராடூன் வருகை தர உள்ளனர் எனவும், இன்று பிற்பகல் 3 மணிக்கு அக்கூட்டம் கூட உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.