
கோவையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள அதிமுக சார்பில் ஒவ்வொரு தொண்டர்களுக்கு 200 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், விழா முடிவதற்குள் அந்த பணத்தை அவர்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று குடித்து மகிழ்ந்தனர்.
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது. மைனாரிட்டி அரசு என்ற எதிர்க்கட்சிகளின் பரபரப்புரை, டெங்கு, சென்னை மழை வெள்ளம், கன்னியாகுமரியை பதம் பார்த்த ஒகி புயல், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் என பரபரப்பான சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் அரசின் சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவையில் நேற்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள , தொண்டர்களை அழைத்து வரும் அரசு, தனியார் மற்றும் பள்ளி, கல்லூரிகளின் டிரைவர்கள், கிளீனர்கள் மற்றும் தொண்டர்கள் நேற்று காலையிலேயே எம்.எல்.ஏ கனகராஜ் வீட்டில் அனைவரும் குவிந்தனர். அப்போது அவர்களுக்கு மது பாட்டில், பிரியாணி, தண்ணீர் பாக்கெட் மற்றும் கட்சி கொடிகள் என்று அனைத்தையுத் கனகராஜ் எம்எல்ஏ நேரடியாக வழங்கினார். இது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக வந்த தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் குடிப்பதற்காக 200 ரூபாய் வழங்கப்பட்டது.
இதையடுத்து கூட்டம் முடிவதற்குள் அதிமுக தொண்டர்கள் நேரடியாக டாஸ்மாக் கடையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விட்டனர். மேலும், டாஸ்மாக் கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், சாலைகளில் வைத்தே குடிக்க ஆரம்பித்து விட்டனர்.
தொண்டர்களுக்கு பணம் கொடுத்த கொஞ்ச நேரத்தில் அது டாஸ்மாக் கடைகளுக்கு போய் சேர்ந்து வேடிக்கையாக இருந்தது.