எம்.ஜி.ஆரும், வைகோவும் திமுகவின் துரோகிகள்... 24 மணி நேரம்தான் தூக்கிடுவோம் ஜாக்கிரதை... துரைமுருகன் பகீர்..!

By Thiraviaraj RMFirst Published Sep 28, 2021, 4:32 PM IST
Highlights

இத்தனைக்கும் வை.கோபால் சாமி திமுக கூட்டணியில் இருக்கிறார். அவரை துரோகி என துரைமுருகன் பேசியுள்ளது கூட்டணிக்கு இடையே தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கட்சிக்குத் துரோகம் செய்கிறவன் எவ்வளவுப் பெரிய ஆளாக இருந்தாலும், இந்த துரைமுருகன் நினைத்தால் 24 மணி நேரத்தில் கட்டம் கட்டப்படுவான் என அமைச்சர்ரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் எச்சரித்துள்ளார்.

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையில் தி.மு.க., சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ’’இந்த தேர்தலில் அ.தி.மு.க., தோல்வியடைந்தால் வரும் மக்களவை, சட்டசபை தேர்தலில் கூட நிற்க அவர்களுக்கு தைரியம் வராது. போட்டியிட வாய்ப்பு கேட்டு கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம்.

தேர்தல் நடந்து முடிந்து மூன்று நாட்களில் கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும். புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஆவின் சங்கங்களும் கலைக்கப்படும். தேர்தலில் இடம் கிடைக்காதவர்களுக்கு சங்கங்களில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். 32 வாரியங்களும் கலைக்கப்பட்டு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு பதவிகள் வழங்கப்படும். சீட் கிடைக்காத ஆத்திரத்தில் எங்களை அடித்தால்கூட வாங்கிக்கொள்வோம். உங்களுக்கு உரிமையுண்டு. 

ஆனால், கட்சிக்குத் துரோகம் செய்கிறவன் எவ்வளவுப் பெரிய ஆளாக இருந்தாலும், இந்த துரைமுருகன் நினைத்தால் 24 மணி நேரத்தில் கட்டம் கட்டப்படுவான். எத்தனை காலத்துக்குத் துரோகிகளையே பார்த்துக்கொண்டிருப்பது. அண்ணா காலத்தில் சம்பத்தைப் பார்த்தோம். அதன்பின் எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். அப்புறம் கோபால்சாமியைப் பார்த்துள்ளோம். இனிமேல் அப்படி பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். கட்டுப்பாடுடன் இருங்கள். நமக்குத் தெரியாத தேர்தல் வித்தைகளில்லை. எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளர் மூலமாக பட்டியல் பெறப்பட்ட பின் தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு சொசைட்டிகளிலும், வாரியங்களிலும் உரிய பதவிகள் வழங்கப்படும்’’ என அவர் தெரிவித்தார்.

இத்தனைக்கும் வை.கோபால் சாமி திமுக கூட்டணியில் இருக்கிறார். அவரை துரோகி என துரைமுருகன் பேசியுள்ளது கூட்டணிக்கு இடையே தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. 

click me!