ஆணவம் பிடித்தவர்... பதவி பித்தர்... புதுவை ஆளுநர் கிரண்பேடியைக் காய்ச்சி எடுத்த வைகோ!

By Asianet TamilFirst Published Jul 2, 2019, 6:23 AM IST
Highlights

தண்ணீர் பிரச்னையில் தமிழகம் தவித்துக்கொண்டு இருக்கிற நிலையில், தமிழக மக்களைக் இழிவுபடுத்துகிற வகையில், புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கருத்துத் தெரிவித்து இருப்பது வரம்பு மீறியதும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதும் ஆகும். 

தமிழக மக்களைப் பொறுப்பு அற்றவர்களாகச் சித்தரிக்க முனைகிற கிரண் பேடியின் ஆணவப் போக்குக்கு கண்டனத்தைத் தெரிவிப்பதாக மதிமுக பொதுச்செயாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
“சென்னையின் தற்போதைய பிரச்னைக்கு தமிழகத்தின் மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சியபோக்கு ஆகியவையே காரணம். பொதுமக்களின் சுயநல எண்ணமும் ஒரு காரணமாக கூறலாம்.” என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியது பெரும் சர்ச்சையானது. அவருக்கு எதிராக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்துவருகிறார்கள். இந்நிலையில் அவரை ஆளுநர் பதவியிலிருந்து திரும்ப பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கை:


தண்ணீர் பிரச்னையில் தமிழகம் தவித்துக்கொண்டு இருக்கிற நிலையில், தமிழக மக்களைக் இழிவுபடுத்துகிற வகையில், புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கருத்துத் தெரிவித்து இருப்பது வரம்பு மீறியதும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதும் ஆகும். தமிழக மக்களைப் பொறுப்பு அற்றவர்களாகச் சித்தரிக்க முனைகிற கிரண் பேடியின் ஆணவப் போக்குக்கு மதிமுக சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
டெல்லி மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுத் தோல்வி அடைந்த கிரண் பேடி, புதுச்சேரி ஆளுநராகப் பொறுப்பேற்ற நாள் முதல், தாமே ஆட்சியாளர் போலச் செயல்பட்டு வருகிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு நிர்வாகத்தை முடக்கியதுடன், முதல்வரையும் சட்டப்பேரவை உறுப்பினர்களையும் துச்சமாகக் கருதிச் செயல்பட்டு வருகிறார். மாநில அரசு நிர்வாகத்தில் தலையிட அவருக்கு உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியவுடன் பதவி விலகி இருக்க வேண்டிய கிரண் பேடி, இன்னமும் பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பது, அவரது பதவிப்பித்தைக் காட்டுகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக, புதுச்சேரி அரசைத் திட்டமிட்டு முடக்கி வருகிற, மக்களை மதிக்காத கிரண் பேடி உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது, அவரைப் பதவியில் இருந்து குடியரசுத் தலைவர் நீக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

click me!