தமிழக மீனவர்கள் படுகொலை: இலங்கைக்கு கடும் கண்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்.

By Ezhilarasan BabuFirst Published Feb 12, 2021, 11:19 AM IST
Highlights

இலங்கைக் கடற்படைக் கப்பலுக்கும், இந்திய மீனவர்களின் மீன்பிடிப் படகுக்கும் இடையே நடந்த மோதலில், நான்கு மீனவர்கள் இறந்தனர். இது தொடர்பாக, நமது கடுமையான கண்டனத்தை, இலங்கையில் உள்ள இந்தியத் தூதர், இலங்கை  அயல் உறவு அமைச்சரிடம் தெரிவித்து இருக்கின்றார். 

1.இலங்கைக் கடற்படைக் கப்பல் மோதித் தகர்த்த  மீனவர்களின் படகில், எத்தனைப் பேர் இறந்தனர்? 2. அதற்கு, இந்திய அரசு ஆற்றிய எதிர்வினை என்ன? கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தீர்களா? இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவித்தீர்களா? 3. திட்டமிட்டு, தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த அவர்களிடம் இருந்து, இழப்பு ஈட்டுத் தொகை ஏதும் கோரி இருக்கின்றீர்களா? 4. அவ்வாறு இருந்தால், அதுகுறித்த தகவல்கள்; 5. இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நேராவண்ணம் தடுப்பதற்காக எடுத்த நடவடிக்கைகள், இந்திய மீனவர்களைக் கைது செய்வது பிடித்துக் கொண்டு போய் சித்திரவதைகள் செய்வதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தருக என மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக வைகோ மாநிலங்களவையில் இன்று கேள்வி எழுப்பினார். அதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். அதன் விவரம்: 

 

நமக்குக் கிடைத்து இருக்கின்ற தகவல்களின்படி, 2021 ஜனவரி 18 ஆம் நாள், இலங்கைக் கடற்படைக் கப்பலுக்கும், இந்திய மீனவர்களின் மீன்பிடிப் படகுக்கும் இடையே நடந்த மோதலில், நான்கு மீனவர்கள் இறந்தனர். இது தொடர்பாக, நமது கடுமையான கண்டனத்தை, இலங்கையில் உள்ள இந்தியத் தூதர், இலங்கை  அயல் உறவு அமைச்சரிடம் தெரிவித்து இருக்கின்றார். அதேபோல, தில்லியில் உள்ள இலங்கைத் தூதரிடமும் கடுமையான கண்டனம் தெரிவித்து இருக்கின்றோம். உயிர்களை இழந்தது குறித்த நமது வேதனையைத் தெரிவித்ததுடன், மீனவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கின்றோம். இதுகுறித்து, இந்திய இலங்கை அரசுகளுக்கு இடையே, இதற்கு முன்பு பரிமாறிக் கொள்ளப்பட்ட கருத்துகளை நினைவூட்டி, அவற்றைக் கவனத்தில் கொண்டு, இனி எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காதவண்ணம் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டு இருக்கின்றோம். 

இந்திய மீனவர்களின் பாதுகாப்பு குறித்து, அரசு ஆகக்கூடுதலான அக்கறை கொண்டுள்ளது. மீனவர்கள் யாரேனும் சிறைப்பிடிக்கப்பட்ட தகவல் கிடைத்தால், உடனடியாக அதுகுறித்து, இலங்கை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்; தூதரகங்களின் வழியாக அவர்களை மீட்பதற்கான  முயற்சிகளை மேற்கொள்கின்றோம். 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், இலங்கைப் பிரதமருடன், இந்தியப் பிரதமர் அவர்கள் நடத்திய இருதரப்பு காணொளி சந்திப்பின்போது, இந்தப் பிரச்சினையை எழுப்பி இருக்கின்றோம்.

2021 ஜனவரி 5,6,7 ஆகிய மூன்று நாள்கள், நான் இலங்கைப் பயணம் மேற்கொண்டபோது, இலங்கை அரசின் மீன்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து மிக விரிவாகப் பேசினேன். இரண்டுக்கு இரண்டு (2+2) என்ற அடிப்படையில், 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகளின் விளைவாக, இரண்டு நாடுகளின் அயல் உறவு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்கள், தில்லியில் நேரில் சந்தித்துப் பேசினர். இருதரப்பினரும் இணைந்து செயல்படுகின்ற வகையில், ஒரு கூட்டுப் பணிக்குழு (Joint Working Group) அமைத்து, மீனவர்களின் பிரச்சினைகளை விரிவாக அலசி ஆராய்ந்து தீர்வு காண்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. 

அந்தப் பணிக்குழுவின் நான்காவது கூட்டம், 2020 டிசம்பர் 30 ஆம் நாள் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், கடல் எல்லை குறித்த மீனவர்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசப்பட்டது. இவ்வாறு, அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்து இருக்கின்றார்.

 
 

click me!