கூட்டம் கூடல.. ஆடம்பரம் இல்ல.. எளிய முறையில் விஜயகாந்த் வீட்டில் நடந்த திருமணம்..!

By Manikandan S R SFirst Published Mar 22, 2020, 11:03 AM IST
Highlights

தேமுதிக தலைவர் விஜய காந்த் தலைமையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர் ஒருவருக்கு இன்று பிரம்மாண்டமாக நடைபெற இருந்த திருமணம் எளிய முறையில் விஜயகாந்தின் வீட்டில் நடந்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மொத்தமாக பலி எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் உலக நாடுகள் பீதியில் உறைந்துள்ளன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் 332 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். இந்தியாவில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே இன்று சுய ஊரடங்கு அமல்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டிருக்கிறது. கடைகள், உணவகங்கள், பொதுப்போக்குவரத்துகள் அனைத்தும் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் இன்று நடைபெற இருந்த முக்கிய நிகழ்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. திருமணம் போன்ற சுப காரியங்களும் பிரதமரின் கோரிக்கையை ஏற்று வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தேமுதிக தலைவர் விஜய காந்த் தலைமையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர் ஒருவருக்கு இன்று பிரம்மாண்டமாக நடைபெற இருந்த திருமணம் எளிய முறையில் விஜயகாந்தின் வீட்டில் நடந்துள்ளது. இதற்காக விஜயகாந்த் வீட்டிற்கு மணமக்கள் விமல், கமலி ஆகியோர் அழைத்து வரப்பட்டனர். மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் விஜயகாந்த் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்று கூட்டம் கூடாமல் திருமணம் நடந்தது.மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை ஏற்று மாஸ்க், சானிடைசர் போன்ற பாதுகாப்பு கவசங்கள் அணிந்து எளிய முறையில் நடைபெற்ற திருமணத்திற்கு விஜயகாந்த் தாலி எடுத்து கொடுத்தார். பின் மணமக்கள் அவரிடம் ஆசி பெற்று கொண்டனர்.

பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க அரசு கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில் அதற்கு முன்மாதிரியாக செயல்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

click me!