Maridhas Released : சண்டையில் எந்த சமரசமும் இருக்காது.. சிறையிலிருந்து வெளியே வந்ததும் தெறிக்கவிட்ட மாரிதாஸ்.!

By Asianet TamilFirst Published Dec 24, 2021, 11:08 PM IST
Highlights

மாரிதாஸ் மீதான இரு வழக்குகள் ரத்தான நிலையில், இன்னொரு வழக்கில் நிபந்தனை ஜாமீன் கிடைத்ததால், மாரிதாஸ் சிறையிலிருந்து விடுதலை உறுதியானது. 

சிறையிலிருந்து மாரிதாஸ் விடுவிக்கப்பட்ட நிலையில், ‘சண்டையில் எந்த சமரசமும் இருக்காது’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

பாஜக ஆதரவாளரும் யூடியூபருமான மாரிதாஸ், கடந்த 8-ஆம் தேதி குன்னூரில் முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, மாரிதாஸ் ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அந்தப் பதிவை அவர் உடனே நீக்கியும்விட்டார். ஆனால், அவதூறாக கருத்து வெளியிட்டதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் மதுரை சைபர் கிரைம் போலீசார் மாரிதாஸை கைது செய்தனர். ஆனால், இந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று மாரிதாஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை ரத்து செய்து கடந்த வாரம் உத்தரவிட்டது. 

இந்த வழக்கில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருந்த வேளையில் தனியார் தொலைக்காட்சி பெயரில் போலி மின்னஞ்சல் அனுப்பிய விவகாரத்திலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருந்தார். மேலும் அவர் மீது, கொரோனா காலத்தில் தப்லீக் ஜமாத் தொடர்பாகவும் இரு பிரிவினருக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையிலும் ட்விட்டரில் வீடியோ பதிவிட்டதாக திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்திலும் ஒரு வழக்குப் பதிவாகியிருந்தது. அந்த வழக்கிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் மேலப்பாளையத்தில் பதிந்த வழக்கையும் ரத்து செய்யக்கோரி மாரிதாஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த வழக்கையும் ரத்து செய்து நேற்று உத்தரவிட்டது. மேலும் போலி மின்னஞ்சல் அனுப்பிய வழக்கில், ஜாமீன் கோரி மாரிதாஸ் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அந்த வழக்கில் நீதிமன்றம் மாரிதாஸுக்கு நிபந்தனை  ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மாரிதாஸ் மீதான இரு வழக்குகள் ரத்தான நிலையில், இன்னொரு வழக்கில் நிபந்தனை ஜாமீன் கிடைத்ததால், மாரிதாஸ் சிறையிலிருந்து விடுதலை உறுதியானது. 

சிறை நடைமுறைகள் முடிந்த நிலையில் இன்று மாலை மாரிதாஸ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரை பாஜகவினர், இந்து மக்கள் கட்சியினர், இந்து முன்னணி உள்பட இந்து அமைப்பினர் சிறை வளாகத்தில் வரவேற்றனர். இதற்கிடையே அவர் விடுதலையாகி வெளியே வந்தபோது வரவேற்ற புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் மாரிதாஸ். அதோடு, ‘சண்டையில் எந்த சமரசமும் இருக்காது - மாரிதாஸ்’ என்றும் பதிவிட்டுள்ளார். 
 
 

click me!