Oneday CM: அர்ஜூன் படத்தில் வருவதுபோல என்னை ஒரு நாள் முதல்வராக்குங்கள்.. மு.க. ஸ்டாலினை ஜெர்க் ஆக்கிய சீமான்.!

By Asianet TamilFirst Published Dec 24, 2021, 10:34 PM IST
Highlights

விடுதலை செய்யும் அதிகாரம் எங்களிடம் இல்லை. ஸ்டாலின் நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். எதற்காக பயப்படுகிறீர்கள். பா.ஜ.கவினர் கத்துவார்கள். அவர்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

அர்ஜீன் படத்தில் வருவதைப்போல என்னை ஒரே ஒரு நாள் முதல்வராக்குங்கள். எல்லாவற்றையும் செய்து விட்டு விலகிவிடுகிறேன். முதல்வர் துணிந்து முடிவு எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திமுக - நாம் தமிழர் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சீமான் பங்கேற்றார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளையும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசுகையில், “சிறையில் உள்ளவர்களை விடுவிப்பது குறித்து தமிழக அரசு குழு அமைத்துள்ளது. எங்களைப் பொறுத்தவரை வீதியில் நின்று மக்கள் போராடுவதுதான் எங்களுடைய கருத்து. ஆனால், புழு கூட நகரும். அரசு அமைக்கும் குழுக்கள் எதுவுமே செய்யாது. என்னை பார்த்து பேசுங்கள் என்று போலீஸார் சொல்கிறார்கள். 

மொழி வழியே தான் தேசிய இனங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. சாதி, மதம் வாரியாக மாநிலங்கள் எதுவும் பிரிக்கப்படவில்லை. மொழிவாரியாகத்தான் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இஸ்லாமியர்களை தேசிய இனத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். மானமுள்ள தமிழன் திமுகவுக்கு ஒட்டு போட மாட்டான் என பழனி பாபா கூறினார். ஆனால், ஓட்டு போடுகிறான். அப்படியென்றால் மானம் இல்லை என்றுதான் அர்த்தம். மதத்தை காரணம் காட்டி இஸ்லாமியர்களை விடுவிக்காமல் இருப்பதை ஏற்கவே முடியாது. 7 தமிழர்களும் இஸ்லாமியர்களுக்கும் விடுவிக்காமல் இருப்பது சரியல்ல. இதை தமிழக அரசு புரிந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் விடுதலை செய்ய வேண்டும்.

இதற்காக நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். எனக்கு வேறு எந்த வேலையும் இல்லை. டெல்லியில் நடந்த போராட்டம் போல திருச்சியில் உட்கார்ந்துவிடுவேன். சிறைக் கதவை திறந்து அவர்களை விடு அல்லது எங்களை உள்ளே போடு் என்று சொல்வோம். எங்களால் போராட மட்டும்தான் முடியும். விடுதலை செய்யும் அதிகாரம் எங்களிடம் இல்லை. ஸ்டாலின் நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். எதற்காக பயப்படுகிறீர்கள். பா.ஜ.கவினர் கத்துவார்கள். அவர்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். முதல்வர் ஸ்டாலின் விடுதலை செய்வார் என்ற நம்பிக்கையில்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 

நான் ஓட்டுக்கானவன் எல்லாம் கிடையாது. உரிமைக்கானவன், உறவுக்கானவன். மதத்தை பார்க்காமல் மனிதத்தை பார்த்து 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுவோரை தமிழக முதல்வர் விடுவிக்க வேண்டும். 7 தமிழர்களை விடுவிப்பதில் என்ன பிரச்சினை? ஆளுநர் என்ன முடிவு எடுப்பார்? அர்ஜீன் படத்தில் வருவதைப்போல என்னை ஒரே ஒரு நாள் முதல்வராக்குங்கள். எல்லாவற்றையும் செய்து விட்டு விலகிவிடுகிறேன். முதல்வர் துணிந்து முடிவு எடுக்க வேண்டும்” என்று சீமான் பேசினார். 

click me!