ஓரம் கட்டப்பட்ட உதயநிதி.. கனிமொழிக்கு திடீர் முன்னுரிமை.. திமுகவில் என்ன நடக்கிறது?

By Selva KathirFirst Published Oct 6, 2020, 10:23 AM IST
Highlights

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக திமுக மகளிர் அணி போராட்டம் நடத்த ஸ்டாலின் அனுமதி கொடுத்திருப்பதன் மூலம் உதயநிதிக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்துள்ளார் என்கிறார்கள் அரசியல்நோக்கர்கள்.

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக திமுக மகளிர் அணி போராட்டம் நடத்த ஸ்டாலின் அனுமதி கொடுத்திருப்பதன் மூலம் உதயநிதிக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்துள்ளார் என்கிறார்கள் அரசியல்நோக்கர்கள்.

திமுக தலைவராக தனக்கு மு.க.ஸ்டாலின் முடிசூட்டிக் கொண்ட சில நாட்களிலேயே அடுத்த மன்னர் உதயநிதி தான் என்பது போல் அவருக்கு இளவரசர் பட்டம் சூட்டினார். அதாவது திமுக இளைஞர் அணிச் செயலாளர் எனும் பொறுப்பை உதயநிதியிடம் வழங்கினார் மு.க.ஸ்டாலின். கலைஞர் திமுக தலைவராக இருந்த போது அவரது மகன் மு.க.ஸ்டாலின் வகித்து வந்த பதவி தான் திமுக இளைஞர் அணிச் செயலாளர். தலைவராக பதவி ஏற்ற பிறகு அந்த பதவியை வெள்ளக்கோவில் சாமிநாதனிடம் ஒப்படைத்தார் ஸ்டாலின்.

பிறகு வெள்ளக்கோவில சாமிநாதனிடம் இருந்து இளைஞர் அணிச் செயலாளர் பதவி உதயநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல் திமுகவின் ஒரு அதிகார மையமாக மாறினார் உதயநிதி ஸ்டாலின். திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் என்பது மிக உயரிய பொறுப்பு. அந்த பொறுப்பிற்கு தனது ஆதரவாளரை நியமிக்கும் வரை உதயநிதியின் அரசியல் செல்வாக்கு உயர்ந்தது. அதே நேரத்தில் உதயநிதி எப்போதுமே தனது அத்தையும் திமுக எம்பியுமான கனிமொழியை போட்டியாளராகவே கருதி வருகிறார்.

கலைஞர் இருந்தவரை எப்படி ஸ்டாலினுக்கு மு.க.அழகிரி போட்டியாளராக கருதப்பட்டாரோ, அதே போல் உதயநிதிக்கு கனிமொழி போட்டியாளராக கருதப்படுகிறார். இதனை உணர்ந்தே கனிமொழிக்கு எதிரான அரசியலை உதயநிதி தீவிரமாக செய்து வந்தார். சாத்தான்குளம் தந்தை மகன் கொலை சம்பவத்தை தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு கனிமொழி அரசியல் செய்து வந்தார். அவருக்கு போட்டியாக இரவோடு இரவாக சாத்தான்குளம் புறப்பட்டுச் சென்று ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து உதயநிதி – கனிமொழி மோதல் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது. பொதுக்குழுவில் கூட உதயநிதிக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் கனிமொழிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் உதயநிதியின் செயல்பாடுகள் திமுக மூத்த நிர்வாகிகளை அதிருப்தி அடைய வைத்தாக தகவல் வெளியானது. மேலும் அவரது செயல்பாடுகள் குறித்து அடுத்தடுத்து புகார்கள் ஸ்டாலினை எட்டின. மேலும் உதயநிதி கனிமொழியை ஒடுக்குவதை தென்மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள நாடார் சமுதாயம் விரும்பவில்லை.

தேர்தல் நேரத்தில் தேவையில்லாமல் நாடார் சமுதாயத்தை பகைத்துக் கொள்ள ஸ்டாலின் விரும்பவில்லை என்கிறார்கள். மேலும் அதிகாரம் கைக்கு கிடைத்துவிட்டதாக கருதி கடிவாளம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் உதயநிதிக்கும் ஒரு வேகத்தைடையை உருவாக்கும் வகையில் ஒரு அதிரடியாக முடிவெடுத்தார் ஸ்டாலின். அதாவது உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதற்கு எதிராக போராட்டம் நடத்த உதயநிதி தலைமையிடம் அனுமதி கோரியதாக சொல்கிறார்கள்.

இதே போல் திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழியும் போராட்டத்திற்கு அனுமதி கேட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மகனை ஓரம்கட்டி தனது தங்கையான கனிமொழிக்கு அனுமதி கொடுத்துள்ளார் ஸ்டாலின். இதன் மூலம் திமுகவில் தற்காலிகமாக உதயநிதி ஓரங்கட்டப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இது மகளிர் தொடர்புடைய பிரச்சனை என்பதால் மகளிர் அணி மூலம் ஸ்டாலின் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாக உதயநிதி தரப்பு சொல்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல, தேர்தல் முடியும் வரை அடக்கி வாசிக்கும்படி உதயநிதிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

click me!