250க்கும் குறைவாக குடும்ப அட்டை வைத்திருக்கும் கிராம மக்கள் மூன்று கிலோமீட்டர் தூரம்வரை தள்ளிச் சென்று ரேஷன் பொருட்களை வாங்கும் கடினமான நிலை இருந்து வந்தது.
தமிழகத்தில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடத்தி வரும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இந்தியாவே பாராட்டுகிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு எடப்பாடியை பாராட்டி இருப்பது மறைமுகமாக அவரை ஆதரிப்பதாகவோ கருதப்படுகிறது.
தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் நகரும் நியாய விலைக் கடையின் திட்டத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துவக்கி வைத்தார். அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கயத்தாறு ஒன்றியத்தின் கல்லூரணி கிராமத்தில் நகரம் நியாயவிலைக்கடை சேவையை மக்கள் பயன்பாட்டிற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- 250க்கும் குறைவாக குடும்ப அட்டை வைத்திருக்கும் கிராம மக்கள் மூன்று கிலோமீட்டர் தூரம்வரை தள்ளிச் சென்று ரேஷன் பொருட்களை வாங்கும் கடினமான நிலை இருந்து வந்தது. அவர்களுக்கென்று தனியாக ரேஷன் கடை அமைக்க முடியாத நிலை இருந்து வந்தது. அந்த குறைகளை களையும் வகையில் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வழியில் ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நகரம் நியாய விலை கடை திட்டத்தின் மூலம் குடிமை பொருட்களை கொண்டு சென்று மக்களுக்கு வழங்கும் சிறப்பான சேவையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்துள்ளார்.
தற்போது அவரின் இந்த முயற்சியை இந்தியாவே பாராட்டி வருகிறது எனக் கூறினார். அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் தலைமையில் அமைச்சர்கள் குழுவாக செயல்பட்டு வரும் நிலையில், யார் முதல்வர் வேட்பாளர் என்று யுத்தம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வானளவு புகழ்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியிருப்பது, எடப்பாடி பழனிச்சாமிக்கான அவரது மறைமுகமுக ஆதரவாகவே கருதப்படுகிறது.