
போலியான நிறுவனங்களின் பெயரில் 3 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்து பெரும் இழப்பை ஏற்படுத்திய மகாராஷ்ட்ரா வங்கியின் தலைவர் மற்றும் அதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளில் மிக முக்கியமான இடத்தில் இருப்பது மகாராஷ்டிரா வங்கி. கடந்த 83 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த வங்கியின் தலைவராகவும், மேலாண்மை இயக்குனராகவுன் ரவிந்திரா பி மராத்தே என்பவர் இருந்து வருகிறார்..
இந்நிலையில் நிதி நிறுவனம் நடத்தி வந்த டி.எஸ். குல்கர்னி மற்றும் அவரது மனைவியின் பெயரால் டி.எஸ்.கே. குழுமத்தின் சார்பில் இயங்கி வந்த சில போலி நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் சுமார் 1150 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், முறைகேடாக வங்கிகளிடம் இருந்து சுமார் 2900 கோடி ரூபாய் கடனாக பெற்று மோசடி செய்ததாகவும் கடந்த ஜனவரி மாதம் குற்றச்சாட்டு எழுந்தது..
இதைதொடர்ந்து, டி.எஸ்.கே. குழுமத்தின் உரிமையாளர் டி.எஸ். குல்கர்னி மற்றும் அவரது மனைவியை கடந்த பிப்ரவரி மாதம் போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநில அரசின் நடவடிக்கையால் இவர்களுக்கு சொந்தமான 120 சொத்துகளும், 275 வங்கி கணக்குகளும் கடந்த மே மாதம் முடக்கப்பட்டன.
இந்நிலையில், குல்கர்னிக்கு சொந்தமான போலி நிறுவனங்களுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடனை வாரி வழங்கிய மகாராஷ்டிரா வங்கியின் தலைவர் ரவிந்திரா பி மராத்தே, செயல் இயக்குனர் ராஜேந்திரா கே குப்தா, வட்டார மேலாளர் நித்யானந்த் தேஷ்பான்டே மற்றும் முன்னாள் தலைவரும் மேலாண்மை இயக்குனருமான சுஷில் முஹ்னோத் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
விஜய் மல்லையாஇ நீரவ் மோடி என பல தொழிலதிபர்கள் இந்திய வங்கிகளை ஏமாற்றி பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கடனாக பெற்று தற்போது வெளிநாடுகளூக்கு தப்பி ஓடிவிட்டனர்.
இந்நிலையில் மகாராஷ்ட்ரா வங்கியின் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளே 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஏமாற்றி இருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.