காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதையடுத்து ஆளுநா வோராவின் ஆலோசகராக தமிழகத்தைக் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநில ஐஏஎஸ் அதிகாரி சுப்ரமணியன் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டதையடுத்து, மெகபூபாவுக்கு கொடுத்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றுக் கொண்டது. . மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது.
இதையடுத்து முதலமைச்சர் பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார். ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கப்போவதில்லை என்று பா.ஜ.க.வும் அறிவித்தது. வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோராததால் ஆளுநர் ஆட்சிக்கு கவர்னர் வோரா பரிந்துரை செய்தார்.
கவர்னரின் பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இன்று முதல் ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமலில் உள்ள நிலையில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுப்ரமணியம் , காஷ்மீரின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், கவர்னரின் ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் மற்றும் பி.பி.வியாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுகொன்ற அதிரடிப்படையினருக்கு விஜயகுமார் ஐபிஎஸ் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.