
சிறைவைக்கபட்டுள்ள எம்.எல்.ஏக்களை மீட்க செல்வதாக சென்ற அமைச்சர் பாண்டியராஜன் கோவளத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
தமிழக அரசியலின் உச்சகட்ட பரபரப்பு சூழ்நிலையில், சசிகலா மீதான சொத்துகுவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
இதனால் எடப்பாடி பழனிச் சாமி, அ.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலாவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்கள் துயரங்களை வெளியே சொல்ல முடியாமல் தவிப்பதாகவும் ஒ.பி.எஸ்ஸிடம் தஞ்சம் புகுந்த அமைச்சர் பாண்டியராஜன் ஏற்கனவே தெரிவித்து வந்தார்.
தற்போது சசிகலாவின் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. இதையடுத்து முதலமைச்சர் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையுடனும் மனசட்சியுடனும் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
சசிகலா சிறைக்கு செல்ல இருப்பதால் சட்டமன்றகுழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுனரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஒ.பி.எஸ்ஸின் ஆதரவு அமைச்சர் கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை மீட்க செல்வதாக கூறி காரில் கூவத்தூர் புறப்பட்டார்.
பின்னர், கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிரபிக்கபட்டுள்ளதால் அங்கு நீங்கள் செல்ல முடியாது என போலீசார் அவரை கோவலத்திலேயே தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.