ஆர்.கே.நகரில் தோற்றதற்கு காரணமாணவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீங்க? இபிஎஸ்க்கு லெட்டர் எழுதி பரபரப்பை பற்றவைத்த மதுசூதனன் !!

First Published Jan 10, 2018, 6:56 AM IST
Highlights
Madusoodanan wrote a letter to eps about r.k.nagar


சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக ஏன் தோற்றது ? இந்த தோல்வி குறித்து ஆலோசனை நடத்தினீர்களா ? அதற்கு காரணமாணவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீங்க ? அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த மதுசூதனன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும்,  தேர்தல் தோல்வி தொடர்பாக 7 நாட்களுக்குள் அமைச்சர் ஜெயக்குமார், வெங்கடேஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியிறுத்தியுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சந்தித்த தோல்வி, அக்கட்சியில் பூகம்பத்தை உண்டாக்கியுள்ளது. அந்த தொகுதியில் போட்டியிட்டு தோற்ற மதுசூதனன். தேர்தல் தோல்விக்குப் பின் மீடியாக்களிடம் பேசுவதை தவிர்த்து வந்தார்

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மதுசூதனன் எழுதியுள்ள கடிதம் ஒன்று அக்கட்சியின் தலைமையை ஆட்டங்காண வைத்துள்ளது.  அந்தக் கடிதத்தில் மதுசூதனன், தன்னுடைய 14 கேள்விகளுக்கு  உரிய பதிலைத் தரும்படி கூறியிருக்கிறார். கேள்விக்கு முன்னதாக மிக நீளமான கடிதம் ஒன்றையும் மதுசூதனன் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில்  ஆர்.கே.நகரில் நான் தோற்றதற்கு என்ன காரணம் ? யார் காரணம்? , அம்மா மறைவுக்குப் பின்னர் கழகம் இரண்டானது. தொண்டர்கள் தவித்தனர். நாம் தனித்தனியாக இருவேறு அணியாகக் கிடந்தோம். அப்படிக் கிடந்த அணிகளை ஒன்றாக்கி கட்சியை வலுவாக்கியதுதான் நான் செய்த தவறா? நம்முடைய பிரிவால் எதிரிகள் வலுப்பெற்றுக் கழகத்தை சிதைத்து விடுவார்கள் என்று கருதி நானும் அண்ணன் கே.பி.முனுசாமியும்தானே இந்தப் பேச்சு வார்த்தைக்கே பாலம் அமைத்துக் கொடுத்தோம்? அணிகளை இணைய விடாமல், எதிரணிகளுக்கு பலம் சேர்க்கும் விதமாக  இணைப்பைத் தடுத்தவர், இன்றுவரை உங்கள் நம்பிக்கைக்கு உரிய அமைச்சர்தானே? தொகுதியில் நான் தோற்க கடமை உணர்வுடன் செயலாற்றியவரும் அந்த அமைச்சர் தானேதானே?  என சரமாரியாக கேள்விகள் எழுப்பியுள்ளார்.

இந்த நிமிடம் வரையில் அதிமுக  இடைத் தேர்தலில் தோற்றது குறித்து எந்த ஆய்வுக் கூட்டமும்  நடத்தப்பட வில்லையே அது ஏன்? அம்மா இருந்திருந்தால் இப்படியெல்லாம்  நடந்திருக்குமா?  என வினா எழுப்பியுள்ளார்.

ஆர்.கே. நகர்த் தொகுதிக்கான தேர்தலில் மூத்த ஆமைச்சர் ஜெயகுமாரே வேலையில் சுணக்கம்  காட்டியதைப் பார்த்த மற்ற பொறுப்பாளர்கள், முதல்நாளே அவரவர் ஊர்களுக்குக் கிளம்பிப் போய் விட்டது உங்களுக்குத் தெரியுமா?

அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்று சகோதரர் மைத்ரேயன் பதிவு போட்ட போது அனைவருமே ஒரே குரலில் மறுத்தீர்களே. உண்மையைச் சொல்லுங்கள், நம் மனங்கள் இணைந்துதான் இருக்கிறதா?

இன்றும் ஓ.பி.எஸ். அணியிலிருந்து வந்தவர்களுக்குக் கட்சியில் எந்த முக்கியப் பொறுப்பும் கொடுக்கப்படாமல் இருக்கிறதே, வடசென்னை மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் அதுதானே உண்மை நிலவரம். இதை காலங்கடந்து போய் இனிமேல்தான் சரி செய்யப் போகிறீர்களா ?  என கேள்வி எழுப்பியுள்ளார்.

எனக்கு திருப்தியைத் தரக் கூடிய அளவில் உங்கள் பதில் இல்லையென்றால்  நான் தன்னிச்சை  கட்சியில் சில முடிவுகளை மேற்கொள்ள வேண்டிவரும் என மதுசூதனன் மிகக் கடுமை காட்டி கடிதம் எழுதியுள்ளார்.

மதுசூதனனின் இந்த கடிதம் அதிமுகவுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் நடத்தி வரும் பனிப்போர், அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ள மதுசூதனனை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

click me!