
தமிழக காங்கிரஸில் ஜனரஞ்சகமான பேச்சுத்திறன் வாய்ந்த தலைவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் ஒருவர் பீட்டர் அல்போன்ஸ். காங்கிரஸுக்கும், தமிழ் மாநில காங்கிரஸுக்கும் இடையில் சண்டிங் அடித்துக் கொண்டிருந்தாலும் கூட பேச்சுத்திறமையில் சமரசம் செய்து கொள்ள முடியாத புள்ளி. இளங்கோவன் போல் வெடித்து, வேடிக்கையாய் பேசாமல் சிதம்பரம் போல் நறுக்கென ஊசி குத்தும் நயம் தெரிந்தவர்.
இப்பேர்ப்பட்ட பீட்டர் சமீபத்தில் அ.தி.மு.க.வை அங்குலம் அங்குலமாக விமர்சித்திருக்கிறார். அதன் போக்கில் இரு முதல்வர்களையும் தாளித்திருக்கிறார் இப்படி..
“எம்.எல்.ஏ.வாகி சட்டமன்றத்தினுள் நுழைந்துவிட்ட தினகரனால் அ.தி.மு.க.வை கைப்பற்ற முடியுமா? என்று கேட்கிறார்கள்.
சுயேட்சையாக வெற்றி பெற்ற ஒருவர், எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்று ஒரு மாதத்திற்குள், இந்த கட்சியுடன் சேர்ந்து செயல்படுகிறேன்! என ஒரு கட்சியை சுட்டிக்காட்டி சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தால் அவர் அந்த கட்சி உறுப்பினராக அங்கீகரிக்கப்படுவார்.
ஒருவேளை அ.தி.மு.க.வை தினகரன் கைப்பற்றும் நிலை வந்தாலும் அவர் கட்சியில் பதவி வகிக்க முடியாது. ஆனால் ஆட்சிக்கு முதல்வராக வரலாம். ஜார்கண்டில் மதுகோடா இருந்தது போல் சுயேட்சையான தினகரன் அரசாளலாம்.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டாலும், வெட்கமே இல்லாமல் இ.பி.எஸ்.ஸும், ஓ.பி.எஸ்.ஸும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகியவற்றை பெற்றுக் கொண்டு தினகரனுக்கு கீழ் துணை முதல்வர்களாக இருப்பதற்கான சாத்தியங்களும் உண்டு.” என்று நெத்தியடியாக பேசியிருக்கிறார்.
போகிற போக்கில் பொசுக்கென போட்டுப் பொளந்திருக்கும் பீட்டருக்கு நறுக், சுருக்கென பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறது அ.தி.மு.க.!