சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களுக்காக, அவரவர் கட்சியைச் சார்ந்த தொண்டர்களை தேர்தல் வேலைகளுக்காக அழைத்துக் கொள்வது வழக்கம். இது பொதுத் தேர்தலுமல்ல.. இடைத் தேர்தல்தான். அதனால் தொகுதியில் தங்கி வேலை பார்க்க கட்சித் தொண்டர்கள் பலர் ஆர்வத்துடன் வந்து குவிகின்றனர்.
இங்கே, அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனனுக்காக தேர்தல் பணி செய்ய தமிழகம் முழுவதிலும் இருந்து அதிமுக., கட்சித் தொண்டர்களை வரவழைத்துள்ளனர். சாதாரண பொதுக்கூட்டத்துக்கே நாள் கூலி கொடுத்து அழைத்து வரும் நிலையில், சில நாட்கள் தங்கி வேலை பார்க்க வேண்டும் என்பதால், தொண்டர்களும் எதிர்பார்ப்பில் தொகுதியில் குவிந்துவிட்டனர்.
ஆனால், இந்த முறை அவர்கள் சற்று தாமதமாகத்தான் அழைத்து வரப் பட்டார்கள். இவர்களுக்கு கட்சி சார்பில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். தங்குவதற்கு, உணவுக்கு, மற்ற விஷயங்களுக்கு என்று கட்சி அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துவிடும். ஆனால் இந்த முறை சரியான முன்னேற்பாடு இல்லாததால், தொண்டர்கள் பெரும் அவதிப்படுகின்றனராம். காரணம் அவர்களை தேர்தல் வேலை பார்க்க அழைத்ததே ரொம்ப லேட்டாம்.
ஆனால், ஏற்கெனவே தொகுதியில் தொப்பிக்குள் தொப்பியோடு தொகுதியை வலம் வந்த தினகரன், தனக்கு இருக்கும் அனுபவத்தைப் பயன்படுத்தி, தனக்கு சாதகமாக சில விஷயங்களை முடித்துக் கொண்டுள்ளார். தினகரன் தரப்பினர், சென்னை ஆர்.கே.நகரைச் சுற்றிலும் உள்ள வீடுகளை முன் கூட்டியே வாடகைக்கு எடுத்து விட்டனராம். இதனால், அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் பலரும் ஆர்.கே.நகருக்கு வெளியே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இருக்கும் நிலையில், அடித்து பிடித்து பஸ்பிடித்து, சிரமப் பட்டு, ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருவது ரொம்பவே சிரமமாக இருக்கிறதாம். தங்கள் கஷ்டங்களை எல்லாம் கட்சியினர், வேட்பாளரான மதுசூதனனிடம் சொல்லிப் புலம்பியுள்ளனர். அதைக் கேட்டுக் கொண்ட மதுசூதனன், இன்னும் பத்து நாள்தானே.. கொஞ்சம் சிரமம் பாக்காம வேலை செய்ங்க. நாமதான் கொஞ்சம் முன்னாடியே வீடுகளை வாடகைக்கு எடுத்திருக்கணும். அதுலதான் கோட்டை விட்டுட்டோம்... ஆனா தேர்தல்ல விட்டுடமாட்டோம். கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்குங்க என்று சமாதானப் படுத்தினாராம்.
தினகரன் தரப்பினர் எதற்கு முந்தினரோ இல்லையோ, தேர்தல் வந்தால் எப்படி அணுக வேண்டும் என்பதை சரியாக அடி மேல் அடி வைத்து செய்துவிட்டனர். விஷாலோ, வெச்சி செய்வதற்கு தெரியாமல், அழுகுனி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார்.