
சென்னை தண்டையார்பேட்டை தேர்தல் அலுவலர் அலுவலகம் அருகே நேற்று இரவு திடீரென மதுசூதனன் – தீபா ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் போட்டியிட 145 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன .மனுத்தாக்கல் செய்திருந்தவர்களின் வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்றது.
இதில் நடிகர் விஷால் , ஜெ.தீபா உள்பட 73 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் ஜெ.தீபா ஆதரவாளர்கள் தேர்தல் அலுவலர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
அப்போது அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் குறித்து, ஜெ.தீபா ஆதரவாளர்களும், தீபா குறித்து மதுசூதனன் ஆதரவாளர்களும் சில விமர்சனங்களை முன்வைத்து பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மதுசூதனன் ஆதரவாளர்களுக்கும், தீபா ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டது. இதில் ஜெ.தீபா ஆதரவாளர்கள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அங்குவந்த காவல் துறையினர் மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனிடையே தன்னுடைய மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த தேர்தல் அலுவலர் அலுவலகத்துக்கு தீபா நேற்று இரவு 10.30 மணிக்கு வந்தார். வந்தார். அப்போது பூர்வீக சொத்து குறித்து தேர்தல் அலுவலரிடம் விளக்கம் அளிக்க வந்ததாக தீபா தெரிவித்தார்.