தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா... கொரோனா பரிசோதனை செய்துகொண்ட மு.க. ஸ்டாலின்...!

By Asianet TamilFirst Published Sep 30, 2020, 8:25 AM IST
Highlights

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டு ராவுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், மு.க. ஸ்டாலினும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.
 

தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து தினேஷ் குண்டுராவ் கடந்த 25-ம்  தேதி சென்னைக்கு வருகை தந்தார். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம், தலைவர்களுடன் தனிப்பட்ட கூட்டம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தினேஷ் குண்டுராவ், 26-ம் தேதி மாலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சென்று சந்தித்தார். அப்போது திமுக சார்பில் பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என். நேரு உள்ளிட்ட திமுக தலைவர்களும் உடன் இருந்தனர்.

இந்நிலையில் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், ஊர் திரும்பிய தினேஷ் குண்டுராவ் பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படியும் ட்விட்டரில் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்திருந்தார். மேலும் திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி, எம்.எல்.ஏ. மா. சுப்பிரமணியன் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், மு.க. ஸ்டாலினும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள முடிவெடுத்தார். 
அதன்படி மு.க. ஸ்டாலின் உள்பட திமுக நிர்வாகிகளுக்கு அண்ணா அறிவாலயத்தில் தனியார் மருத்துவமனை சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா இல்லை என்பது  தெரிய வந்துள்ளது. 
 

click me!