கேரளாவை பார்த்து கத்துக்கோங்க... நெஞ்சுல கொஞ்சம் ஈரம் இருந்தா இதை செய்யுங்க... எடப்பாடியாரை விளாசிய ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published Jul 9, 2020, 8:36 PM IST
Highlights

கொரோனா பேரிடரில் வீட்டிற்குள் முடக்கி வைக்கப்பட்டதைக் காரணம் காட்டி, வெவ்வேறான அதிகக் கட்டணம் வசூல் செய்யும் 'வீதப்பட்டியல்' (Tariff Slab) அடிப்படையில் புதிய மின்கட்டணம் வசூல் செய்யப்படுவது பொருத்தமானதல்ல; பேரிடர் நேரத்தில் நடுநிலையுடன் - நியாய உணர்வுடன் செயல்படும் போக்கும் அல்ல! 

 ‘ஊரடங்கால் நுகர்வோர் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்திவிட்டதாக’ ஒரு 'சப்பைக்கட்டு' வாதத்தை அமைச்சரும், அதிமுக அரசும் மீண்டும் மீண்டும் கூறி மக்களைக் கேவலப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 
இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்சாரச் சட்ட விதிகளின்படி ஊரடங்கு காலத்தின் போது முந்தைய மின் கட்டணத் தொகையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது” என்று அதிமுக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து- மின் நுகர்வோரின் துயரத்தை உணர மறுப்பதற்கு மிகுந்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முந்தைய மாதத்தில் செலுத்திய கட்டணத்திற்குரிய “யூனிட்களை” கழிக்காமல்” செலுத்திய பணத்தை மட்டும் கழிப்பதால்தான் இந்தக் “கட்டண உயர்வுப் பிரச்சினை” என்பதை இன்னும் மின்துறை அமைச்சர் தங்கமணியோ அல்லது முதல்வர் பழனிசாமியோ உணராமல் இருப்பது கொரோனா ஊரடங்கை விட மிகக் கொடுமை.
ஊரடங்கைப் பிறப்பித்தது அரசு. அது 'பேரிடர் நிர்வாகத்தின்' கீழ் கொரோனாவை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசின் நடவடிக்கை. ஆகவே, அந்தக் காலகட்டத்தில் வேலை இல்லை; சம்பளமும் இல்லை. கூலி வேலை செய்வோர்கூட தினசரி உணவிற்கு வழியின்றி தவித்தார்கள். அடிப்படை வாழ்வாதாரத்திற்கே பணமின்றி, வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போனார்கள். சுய தொழிலை நம்பியிருப்போரும் ஒரு பைசா கூட சம்பாதிக்க முடியாமல் வீட்டிற்குள்ளே ஏறக்குறைய அடைத்து வைக்கப்பட்ட நிலை. பல வகையிலும் வருமானம் ஏதுமின்றி, வாழ்வாதாரத்தை இழந்து தவிப்போரிடம் அதிமுக அரசு ஏன் மனமிறங்க மறுக்கிறது?
பேரிடரைக் காரணம் காட்டி டெண்டர் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் கொள்முதல் செய்ய முடிகிற அரசுக்கு, அதையே காரணம் காட்டி கட்டணத்தை ஏன் குறைக்க முடியவில்லை? வயிற்றுப் பிழைப்பிற்காக வீதிக்கு வரும் மக்களை அடித்துத் துரத்த ஊரடங்கைப் பயன்படுத்திய அரசு, அந்த மக்களின் வாழ்வாதாரம் நொறுங்கிப் போனதை ஏன் உணர மறுக்கிறது? அந்த வாழ்வாதாரம் மற்றும் வருமான இழப்பை ஏன் பேரிடரின் ஓர் அங்கமாகக் கருதிட முதல்வர் பழனிசாமி முன்வரவில்லை? “ஊரடங்கால் நுகர்வோர் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்திவிட்டதாக” ஒரு 'சப்பைக்கட்டு' வாதத்தை அமைச்சரும், அதிமுக அரசும் மீண்டும் மீண்டும் கூறி மக்களைக் கேவலப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து மக்களும் வீட்டிற்குள் முடங்கியதற்கு அரசு பிறப்பித்த ஊரடங்குதான் காரணமே தவிர; பிழைப்புத் தேடி வெளியில் செல்லத் தயாராக இருந்த மக்கள் அல்ல!
ஆகவே, அரசின் உத்தரவால், முடங்கிப் போன மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அதிமுக அரசுக்குத்தான் இருக்கிறது. 'நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால்' என்று அமைச்சரும், முதல்வரும் அரசு வழக்கறிஞர் மூலம் உயர் நீதிமன்றத்தின் முன்பு வாதிட்டு, அப்பாவி மக்களை மேலும் நெருக்கடியில் தள்ளுவது பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல; குடிமக்களிடம் காட்டும் பொல்லாத செயல்! 'மின்சாரச் சட்ட விதிகளை' உயர் நீதிமன்றத்தில் மேற்கோள் காட்டி, அளவுக்கு அதிகமான மின்கட்டணம் வசூலிக்கும் இந்த அநியாய உத்தரவை அதிமுக அரசு நியாயப்படுத்துவது வேதனை. அதே அரசு மின்சாரச் சட்டம், 2003-ல் உள்ள பிரிவு 61-ல் “நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கும் வகையில் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்” என்று இருப்பதை ஏன் முதல்வர் வசதியாக மறந்து விட்டார்?
அந்தச் சட்டத்தின்கீழ் 2006-ல் வெளியிடப்பட்ட 'கட்டணக் கொள்கை'யின் நான்கு முக்கிய நோக்கங்களில், 'நியாயமான முறையில் நுகர்வோருக்குக் கட்டணம் நிர்ணயிப்பதை உறுதிப்படுத்துவது' முதன்மையான நோக்கம்! அதையும் ஏன் முதல்வர் மறந்து விட்டார்? அதிமுக அரசே மேற்கோள் காட்டும் மின்சாரச் சட்டம், 2003-ன்படியே மின் நுகர்வோருக்கு 'கொரோனா பேரிடரை' ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி மின் கட்டணத்தைக் குறைக்கலாம். அதில் எவ்விதத் தடையும் இல்லை. மனம்தான் முதல்வருக்கும் அமைச்சருக்கும் தடையாக இருக்கிறது!

 
கொரோனா பேரிடரில் வீட்டிற்குள் முடக்கி வைக்கப்பட்டதைக் காரணம் காட்டி, வெவ்வேறான அதிகக் கட்டணம் வசூல் செய்யும் 'வீதப்பட்டியல்' (Tariff Slab) அடிப்படையில் புதிய மின்கட்டணம் வசூல் செய்யப்படுவது பொருத்தமானதல்ல; பேரிடர் நேரத்தில் நடுநிலையுடன் - நியாய உணர்வுடன் செயல்படும் போக்கும் அல்ல! மாறாக, அநியாயம் மற்றும் அக்கிரமத்தின் உச்சகட்டம்! ஏனென்றால் 200 முதல் 500 யூனிட்டிற்குள்ளும், 500 யூனிட்டிற்கு மேல் ஒரு யூனிட் அதிகமாக மின்சாரம் பயன்படுத்துவோரின் இல்லங்களுக்கு எல்லாம் கொடுக்கப்பட்டுள்ள 'மின்கட்டணத் தொகை' அவர்களின் இதயத்தைத் தாக்கும் 'எலெக்ட்ரிக் ஷாக்' ஆக அச்சுறுத்தி நிற்கிறது. இதை அதிமுக அரசும், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் உடனடியாக கவனிக்க வேண்டும். ஆகவே, மின்சாரச் சட்டத்தின்கீழ் இருக்கும் 'மின் நுகர்வோர் நலனைப் பாதுகாப்பது' என்ற அடிப்படைக் கோட்பாட்டினை மனதில் வைத்து, ஏற்கனவே பேரிடருக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட மின்கட்டணத்தின் அடிப்படையில் மின்கட்டணம் வசூல் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ரீடிங் எடுக்காததால், முந்தைய மாதத்தில் மின்நுகர்வோர் செலுத்திய மின்கட்டணத்திற்குரிய பணத்தைக் கழித்து பயனாளிகள் மீது தாங்கமுடியாத சுமையை ஏற்றாமல், அந்தப் பணத்திற்குரிய 'ரீடிங்குகளை' கழித்து, மின்கட்டணத்தை மீண்டும் கணக்கிட்டு, மின் நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.
கொரோனா காலத்திற்குரிய - அதாவது 31.7.2020 வரையிலான ஊரடங்குக் காலத்திற்குக் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது போல்- வீட்டுப் பயன்பாட்டிற்கான 70 சதவீத மின்கட்டணத்தைச் செலுத்தினால் போதும் என்று அறிவித்திட வேண்டும். மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதை விட, முதல்வர் பழனிசாமிக்கு இதயத்தில் ஈரம் இருந்தால், இந்த சலுகையைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவது எளிதானதே என்று நம்புகிறேன்" என அறிக்கையில் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

click me!