உணவகங்கள், ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள், அழகு நிலையங்களுக்கான கட்டுப்பாடுகள்..! சென்னை மாநகராட்சி அதிரடி

By Ezhilarasan BabuFirst Published Jul 9, 2020, 7:39 PM IST
Highlights

covid-19 கொரோனா வைரஸ்  தொற்று பரவலை தடுக்க சென்னை மாநகர பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தமிழ்நாடு அரசால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாக  கடைப்பிடிப்பது தொடர்பாக, உணவகங்கள், ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள், அழகு நிலையங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவு மற்றும் ஆலோசனைகளின்படி பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா, வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள், பரிசோதனை மையங்கள்,  covid-19 பாதுகாப்பு மையங்கள், வீடுகளில் தனிமைப்படுத்தும் மேலாண்மை திட்டம், சமூக இடைவெளி கடைப்பிடித்தால், முகமூடி அணிதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

covid-19 கொரோனா வைரஸ்  தொற்று பரவலை தடுக்க சென்னை மாநகர பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உணவகங்கள், ஆன்லைன் உணவு  வழங்கும் நிறுவனங்கள் மற்றும் அழகு நிலையம் நடத்துபவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும், அரசால் 30-7-2020 வரை சில தளர்வுகள் உடன் பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் அரசு வழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடிப்பது தொடர்பாக உணவகங்கள், ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள், அழகு நிலையங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் ஆணையாளர் திரு கே பிரகாஷ் அவர்களின் தலைமையில் இன்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. மேலும் covid-19 தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் கீழ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் வழிகாட்டுதல்கள் அறிவுரைகளை அனைத்து உணவகங்கள், ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள், அழகு நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியது அவசியம் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது. 

அக்கூட்டத்தில் ஆணையர் பிரகாஷ் பேசியதாவது:- அனைத்து  உணவகங்கள் ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள் அழகு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அனைத்து வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்கவேண்டும், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட அனைவரும் 6 அடி இடைவெளியுடன் கூடிய சமூக  இடைவெளிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். உணவகங்கள், அழகு நிலையங்கள் முகப்பு வாயிலில் கண்டிப்பாக கைகளை கழுவுவதற்கு ஏதுவாக கிருமிநாசினி வைக்கப்பட்டு இருக்க வேண்டும். வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் ஒரே  நேரத்தில் அதிகபட்சம் ஐந்து வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில் குளிர்சாதன வசதி இருப்பினும் அவை  இயக்கப்பட கூடாது, மேற்கண்ட நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் உணவகங்கள் அழகு நிலையங்களிடம் அதற்கான அபராத தொகை வசூலிக்கப்படும், எனவே கொரோனா வைரஸ் தொற்று  பரவலை கட்டுப்படுத்தவும் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் அனைத்து வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஆணையர் பிரகாஷ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

 

click me!