ரஜினிக்கு ஆதரவா..? பதறிப்போய் விளக்கமளித்த மு.க.அழகிரி..!

By Manikandan S R SFirst Published May 12, 2020, 8:15 AM IST
Highlights

மதுக்கடைகளை மீண்டும் திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விடுங்கள் என்று நண்பர் ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த கருத்தை நான் ஆதரிப்பது போன்று என் படத்துடன் சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பி வருகிறார்கள். அது குறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. சமூகவலைதளங்களில் எந்தக் கணக்கும் இல்லை. அதை நான் பயன்படுத்தவில்லை

நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கடந்த 7ம் தேதி திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு நீதிமன்றங்கள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்த நிலையில் அவை முறையாக பின்பற்றப்படவில்லை எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 9ம் தேதி முதல் கடைகள் மீண்டும் அடைக்கப்பட்டன. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினி காந்த் டாஸ்மாக் திறப்பு குறித்து அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் என குறிப்பிட்டிருந்தார். இதனிடையே ரஜினியின் கருத்தை முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி ஆதரிப்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அதை மு.க அழகிரி அதிரடியாக மறுத்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், மதுக்கடைகளை மீண்டும் திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விடுங்கள் என்று நண்பர் ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த கருத்தை நான் ஆதரிப்பது போன்று என் படத்துடன் சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பி வருகிறார்கள். அது குறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. சமூகவலைதளங்களில் எந்தக் கணக்கும் இல்லை. அதை நான் பயன்படுத்தவில்லை, என தெரிவித்துள்ளார். மேலும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் தனது பெயரில் உலா வரும் போலி ட்விட்டர் கணக்கு குறித்து நடவடிக்கை எடுக்க மு.க. அழகிரி புகார் அளித்துள்ளார். 

click me!