Chennai Floods: ஆண்டவா சென்னை என்ன கதி ஆகப்போகுதோ.. போக்குவரத்து நிறுத்தம்.. 16 சுரங்கபாதைகள் மூடல்..

By Ezhilarasan BabuFirst Published Nov 11, 2021, 9:03 AM IST
Highlights

தொடர் சூழைக்காற்றுடன் மழை கொட்டி தீர்த்து வருவாதால் சென்னை மாநகராட்சி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுரங்கப்பாதையில் நீர் அதிக அளவில் தேங்கி உள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நிறுத்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கனமழையின் காரணமாக சுரங்கப்பாதைகளில் நீர் அதிக அளவில் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 16 சுரங்கப்பாதைகள்  மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது, இன்று இந்தத் தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை காரைக்காலுக்கும்- ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையில் காற்றழுத்தத் தாழ்வு  மண்டலம் கரையை கடக்க உள்ளது. இதனால் வட தமிழ்நாட்டில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இந்த மழை நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது இன்னும் ஓயாமல் பெய்து கொண்டிருக்கிறது. பல இடங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. 

தொடர் சூழைக்காற்றுடன் மழை கொட்டி தீர்த்து வருவாதால் சென்னை மாநகராட்சி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுரங்கப்பாதையில் நீர் அதிக அளவில் தேங்கி உள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நிறுத்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் சுரங்கப் பாதைகளில் வழியே செல்வதை தவிர்க்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 16 சுரங்கப்பாதைகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 10-11-2021 இரவு முதல் தற்போது வரை பெய்து வரும் கனமழையின் காரணமாக பெரும்பாலான சுரங்கப் பாதைகளில் அதிக அளவு மழை நீர் தேங்கி உள்ளது. இந்த சுரங்கப் பாதைகளில் அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலம் நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்போது மழை நீர் தேக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, தண்டையார்பேட்டையில் உள்ள வியாசர்பாடி நெடுஞ்சாலைத்துறை சுரங்கப்பாதை மற்றும் வார்டு 55 உள்ள கணேசபுரம் சுரங்கப்பாதை, இராயபுரம் மண்டலம் வார்டு 60 -ல் உள்ள ஆர்பிஐ சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் மண்டலம் வார்டு 136 உள்ள துரைசாமி சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் மண்டலம் வார்டு 140 இல் உள்ள அரங்கநாதன் சுரங்கப்பாதை மற்றும் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை, தியாகராய நகர் வார்டு 136 இல் உள்ள மேட்லி சுரங்கப் பாதை மற்றும் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை ஆகிய இடங்களில் கனமழையின் காரணமாக நீர் அதிக அளவில் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இந்த சுரங்கப் பாதைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

எனவே பொதுமக்கள் இந்த சுரங்கப் பாதைகளில் வழியே செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பருவ மழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. பொதுமக்கள் 044-25619204, 044-25619206  ஆகிய தொலைபேசி எண்களுக்கு 1913 என்ற உதவி எண் மற்றும் 9445477205, 9445025819  ஆகிய வாட்ஸ்அப் எண்களிலும் தொடர்பு கொண்டு மழை நீர் தேக்கம் விழுந்த மரங்களை அகற்றுதல் போன்ற புகார் குறித்தும் தங்களுக்கு தேவையான உதவிகள் குறித்து தெரிவிக்கலாம் என செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. 
 

click me!