
பண மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்க போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி புகாரில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த 17ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.
இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி கடந்த 17ம் தேதி முதல் தலைமறைவாக உள்ளதாக விருதுநகர் காவல்துறை தெரிவித்துள்ளது. விருதுநகரில் அதிமுக ஆர்ப்பாட்டத்தை அவசர அவசரமாக முடித்துக்கொண்டு வெவ்வேறு கார்களில் மாறிமாறி சென்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பெங்களூரு, சென்னை, கேரளா போன்ற பல்லேறு பகுதிகளில் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், ராஜந்திர பாலாஜியின் ஆதரவாளர்கள், கட்சி நிர்வாகிகள், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 600 பேரின் செல்போன் எண்கள் ஆய்வு செய்தனர். இதனிடையே, பணமோசடி வழக்கில் ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க விமான நிலையங்களுக்கு இன்று லுக் அவுட் நோட்டீஸ் வழங்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி லுக் அவுட் நோட்டீஸ் வழங்கும் பட்சத்தில் விமானங்களில் அவர் வெளிநாடுகளுக்கு செல்லமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.