முடிந்தது உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகாலம் - தனி அதிகாரிகள் பொறுப்பேற்பு

Asianet News Tamil  
Published : Oct 24, 2016, 11:22 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
முடிந்தது உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகாலம் - தனி அதிகாரிகள் பொறுப்பேற்பு

சுருக்கம்

தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன் முடிகிறது. இதையடுது, தனி அதிகாரிகள் பொறுப்பேற்க உள்ளனர்.

தமிழகத்தில், கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்தது. இதில் பதவியேற்ற பிரதிநிதிகளின் பதவி காலம், இன்றுடன் முடிகிறது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் புதிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் இம்மாதம் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆனால், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ததுடன், புதிய அறிவிப்பாணையை வெளியிட்டு டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 794 உள்ளாட்சி பதவி இடங்கள் உள்ளன. 31 மாவட்ட ஊராட்சிகளில் 655 வார்டு உறுப்பினர்கள், 388 ஊராட்சி ஒன்றியங்களில் 6,471 வார்டு உறுப்பினர்கள், 12,524 கிராம ஊராட்சி தலைவர்கள், 99,324 வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவி இடங்கள் இதில் அடங்கும்.

இதேபோல், நகர்ப்புற உள்ளாட்சியை பொறுத்தவரை, 12 மாநகராட்சிகளில் 919 வார்டு உறுப்பினர்கள், 124 நகராட்சிகளில் 3,613 வார்டு உறுப்பினர்கள், 528 பேரூராட்சிகளில் 8,288 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவி இடங்கள் அடங்கும். உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டால், இந்த பதவி இடங்களுக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, உள்ளாட்சி அமைப்பின் பணிகளை கவனிக்கும் வகையில், தனி அதிகாரிகளை நியமனம் செய்ய, அவசர சட்டத்தை கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பிறப்பித்தார். இந்த அவசர சட்டம் இம்மாதம் 17ம் தேதி தமிழக அரசிதழில் வெளியானது.

அதை தொடர்ந்து, தமிழக அமைச்சரவை கூட்டம் கடந்த 19ம் தேதி நடந்தது. இதில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு யாரை தனி அதிகாரிகளாக நியமிப்பது, அவர்களுக்கு என்னென்ன அதிகாரம் வழங்குவது, என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்நிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன் முடிவடைவதால், தனி அதிகாரிகளை உடனடியாக நியமனம் செய்து, அதற்கான அரசாணையை வெளியிட்டாக வேண்டிய நிலை உள்ளது. எனவே, அதற்கான அரசாணை இன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக, தனி அதிகாரிகளும் பொறுப்பு ஏற்க உள்ளனர்.

பொதுவாக, இதுபோன்ற சூழ்நிலையில், மாநகராட்சிகளில் மாநகராட்சி கமிஷனர்களும், நகராட்சிகளில் நகராட்சி கமிஷனர்களும், பேரூராட்சிகளில் செயல் அலுவலர்களும், ஊராட்சிகளில் நிர்வாக அலுவலர்களும் தனி அதிகாரிகளாக நியமிக்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையிலேயே இந்த முறையும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட இருக்கின்றனர்.

ஆனால், ஊரக உள்ளாட்சி பதவியிடங்கள் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருப்பதால், கூடுதலான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட வேண்டும். எனவே, ஊரக உள்ளாட்சி பகுதிகளில் யாரை–யாரை தனி அதிகாரிகளாக நியமிப்பது என்பது குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவு எடுத்து அறிவிக்க இருக்கின்றனர்.

தனி அதிகாரியாக நியமிக்கப்படும் ஒருவருக்கு 5 உள்ளாட்சி பதவி இடங்கள் வரை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்படும் என மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூறுகின்றனர். அதேபோல், தனி அதிகாரிகளுக்கு சில சலுகைகளும் வழங்கப்படும். அவர்களுக்கு வாகனங்களும், அவற்றுக்கு மாதத்துக்கு சுமார் 50 லிட்டர் டீசல் போன்றவை அளிக்கப்படும்.

தற்போது, நியமிக்கப்பட இருக்கும் தனி அதிகாரிகள், உள்ளாட்சி தேர்தல் முடிந்து முதல் கவுன்சில் கூட்டம் கூடும் வரையிலோ, அல்லது டிசம்பர் மாதம் 31ம் தேதி வரையிலோ அந்த பொறுப்பில் இருப்பார்கள்.

PREV
click me!

Recommended Stories

TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!
TN Politics: தவெக அமைச்சரவையில் விசிக! அப்படியே யூ டர்ன் அடித்த திருமாவளவன்! சுக்குநூறாக உடைந்த திமுக கூட்டணி!