உள்ளாட்சி தேர்தல் எப்போது..? தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Dec 7, 2019, 4:51 PM IST
Highlights

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதில், 6-ம் தேதி (நேற்று) வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற 27-ம் தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு 30-ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு சில மாதங்கள் கழித்து தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.
 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27-ம் தேதி மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதில், 6-ம் தேதி (நேற்று) வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற 27-ம் தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு 30-ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு சில மாதங்கள் கழித்து தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வார்டு வரையறை பணிகள் நடைபெறாததால் பிரிக்கப்படாத பழைய மாவட்டத்தின் அடிப்படையில் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை எதிர்த்து தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தொகுதி மறுவரையறை, சுழற்சி முறை இட ஒதுக்கீடு பணிகள் முடிந்த பிறகுதான் தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் 4 மாவட்டங்களை பிரித்து 9 மாவட்டங்களை உருவாக்கியதன் அடிப்படையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உடனே தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இதற்காக பழைய தேர்தல் அட்டவணையை ரத்து செய்வதாகவும், புதிய தேர்தல் அட்டவணையை வெளியிட உள்ளதாகவும் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து, உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இன்று மாலை 4.30 அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் வரும் 19-ம் தேதியும், உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஜனவரி 2-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் வாக்குப்பதிவு தவிர்க்கப்படுகிறது. 9 புதிய மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் தொடரும் என்றார். நகர்ப்புற பகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி உறுதியளித்துள்ளார். 

click me!