
கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை 12 லட்ச ரூபாயில் இருந்து 20 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். பின்னர் கூட்டுறவு துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை 12 லட்ச ரூபாயில் இருந்து 20 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். மேலும், இந்த கடன் வழங்கல் முறையில் 3 லட்சம் வரை கடன் வாங்குபவர்களுக்கு வெறும் 7 சதவீதம் அளவே வட்டி விகிதம் வசுலிக்கப்படுகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், திருப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு தலைமை அலுவலகம் கட்டப்படும், கூட்டுறவு சங்கங்களின் அனைத்து தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு ஒரு பொதுவான கைப்பேசி செயலி உருவாக்கப்படும். திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலையத்திற்கு சொந்தமான நெல் உற்பத்தி நிலையம் புதுபிக்கப்படும். திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலையத்திற்கு சொந்தமான பாமணி உர ஆலையில் வேப்ப விதைத்தூள் மற்றும் வேப்பம் புண்ணாக்கு உற்பத்தி தொடங்கப்படும்.
அனைத்து கூட்டுறவு வங்கிகளில் நகரும் கூட்டுறவு வங்கிச்சேவை அறிமுகப்படுத்தப்படும். இதற்காக 569 லட்சம் செலவில் 34 வாகனங்கள் வழங்கப்படும். அந்த வாகனங்களில் பேங்கில் இருப்பது போன்ற எல்லா வசதிகளும் இருக்கும். திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலையத்திற்கு சொந்தமான உயிரி உரம் மற்றும் உயிரி பூச்சிக்கொல்லி நுண் ஊட்டச்சத்து கலப்பு உர அலகு அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். முன்னதாக அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் 780 சங்கங்களில் ரூ.482 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என்று குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.